ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோர் 6,76,763- தேர்ச்சி பெற்றது 2,448 மட்டும்தான்!
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. மொத்தம் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வு எழுதியதில் 2,448 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதனால் மீண்டும் அக்டோபர் 3-ந் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல்தாளுக்கான தேர்வை 2 லட்சத்து 88 ஆயிரத்து 588 ஆசிரியர்கள் எழுதினர். இரண்டாவது தாளுக்கான தேர்வில் 3 லட்சத்து 88 ஆயிரத்து 178 பேர் பங்கு பெற்றனர். முதல்தாளில் 1735 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இரண்டாவது தாளில் 713 பேர் தேர்வு பெற்றுள்ளனர் இரண்டு தாள்களிலும் சேர்த்து மொத்தம் 83 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய மொத்தம் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர்களில் 2448 பேர்தான் வெற்றி பெற்று இருக்கின்றனர். தேர்வில் வெற்றி பெறாதோர் மீண்டும் அக்டோபர் 3-ந்தேதி மறுதேர்வு எழுதலாம். இத்தேர்வின் போது கூடுதலாக அரை மணி நேரம் வழங்கப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.