காங். முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு
வேலூர்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன் வீட்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்ற புகாரின் பேரில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
வேலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஞானசேகரன். இவர் கடந்த தேர்தலின் போது தோல்வியைத் தழுவினார். எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது ஞானசேகரன் மீதான புகார்.
இந்தப் புகாரையொட்டி வேலூர் சத்துவாச்சேரியில் உள்ள ஞானசேகரனின் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புப் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டையில் உள்ள ஞானசேகரனின் தம்பி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான சத்துவாச்சாரியில் உள்ள உள்விளையாட்டு அரங்கையும் ஆக்கிரமித்தார் என்பதும் ஞானசேகரன் மீதான புகார். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.