உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 13 இலங்கை சுற்றுலா பயணிகள் உட்பட 18 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை: இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வந்த 13 பேர் உட்பட மொத்தம் 18 பேர் பயணித்த வாடகை வேன், உளுந்தூர்பேட்டை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வேனில் பயணித்த அனைவரும் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜான்(28), மட்டகளப்பு பகுதியை சேர்ந்த குமுதா(45), நேசலட்சுமி(43) மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், லண்டன் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இவர்களின் உறவினர்களான ஆண்டனி இருதயராஜ்(32), அஞ்சலின்(22), அகிலன்(20), அருள்தாஸ்(32), அரசன்(3) உள்பட மொத்தம் 18 பேர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.
தமிழகத்தில் உள்ள பல பகுதிகளை சுற்றி பார்த்த இக்குழுவினர், கடந்த 25ம் தேதி சென்னை விருகம்பாக்கத்தில் இருந்து வாடகை வேன் ஒன்றில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். வேனை விருகம்பாக்கத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் லாசர்(25) என்பவர் ஓட்டினார். சுற்றுலா முடித்து கொண்டு, நேற்று சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.
வேன் உளுந்தூர்பேட்டையை அடுத்த சென்னை-திருச்சி நான்கு வழிச்சாலை அருகே காலையில் வந்த போது, வேன் டிரைவர் லாசர் தூங்கியதாக கூறப்படுகிறது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த டிரைவர் உட்பட 18 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இது குறித்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயசீலி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.