செந்தூரன் உயிரை காப்பாற்றக்கோரி இன்று முதல் மதிமுக தொடர் உண்ணாவிரதம்
சென்னை: சிறப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், உண்ணாவிரதம் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள செந்தூரன் உயிரை காக்க கோரியும் மதிமுக தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது.
இலங்கையிலிருந்து சரியான ஆவணங்கள் ஏதுமின்றி கடல் வழியாக தமிழகம் வந்ததாக செந்தூரனும் அவருடன் சில இலங்கை அகதிகளும் கைது செய்யப்பட்டனர். இதில், செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் 39 பேரும், பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் 8 பேரும் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 6-ந் தேதி செந்தூரன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். 21 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் செந்தூரன் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதை அடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அவரை போலீசார் அனுமதித்தனர்.
வைகோ சந்திப்பு.
செந்தூரனை பார்த்து நலம் விசாரிப்பதற்காக ம.தி.மு.க. தலைவர் வைகோ ஞாயிறன்று மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது வைகோ உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் 45 நிமிடங்கள் வெளியே காத்திருந்தார். உயர் போலீஸ் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னர் அங்கே காவலுக்கு இருந்த போலீசார் வைகோவை உள்ளே செல்ல அனுமதித்தனர்.
செந்தூரனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, எந்த நேரத்திலும் செந்தூரன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இளமையும், அழகும் மிக்க இந்த ஈழத்து இளைஞனை, மரணம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கொண்டு இருக்கிறது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு தமிழக அரசும், காவல்துறையும்தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
எனவே செந்தூரனின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அவரையும், ஈழத்தமிழர்களையும், சிறப்பு முகாம்களில் இருந்து விடுவித்து, உடனடியாக திறந்த வெளி முகாம்களுக்கு அனுப்பி வைக்குமாறு, தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன். சிறப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், செந்தூரன் உயிரைக் காக்கவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், திங்கட்கிழமை ம.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான தாயகத்தில், உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
தொடர் உண்ணாவிரதம்
சிறப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், செந்தூரன் உயிரைக் காக்கவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், திங்கட்கிழமை ம.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான தாயகத்தில், உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து தாயகத்தில் இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. இதனை திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் தொடக்கி வைத்தார். இந்த போராட்டத்தில் மதிமுக கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள, 47 ஈழத்தமிழர்களை விடுவிக்கக் கோரி, ஆகஸ்ட் 28 ம் தேதி முதல் தாயகத்தில், ஒவ்வொரு நாளும், செந்தூரன் கோரிக்கை நிறைவேறும் வரையில், தொடர் உண்ணாவிரத அறப்போர் நடைபெறும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications