மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 2 மகன்களை ஆற்றில் வீசிக் கொன்ற வாலிபர்
மேட்டூர்: மனைவியின் நடத்தையை சந்தேகித்து தன்னுடைய 2 மகன்களை ஆற்றில் வீசிக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி செந்தில். அவரது மனைவி சங்கீதா. அவர்களுடைய மகன்கள் வேல்முருகன்(8), கீர்த்திவாசன்(6).
செந்திலுக்கு தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்துள்ளது. இதனால் அவர் தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலையி்ல் செந்தில் தன்னுடைய மகன்களை அழைத்துக் கொண்டு மேட்டூர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
ஆற்றை அடைந்த அவர் 2 மகன்களையும் தூக்கி நீரில் வீசினார். 2 சிறுவர்களும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மகன்களை வீசிய கையோடு தானும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் மனதை மாற்றிக் கொண்ட அவர் நீந்தி கரையை அடைந்தார். பின்னர் தனது மகன்களையும் தேடியுள்ளார்.
ஆனால் அவர்கள் கிடைக்காததால் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் நேற்று மாலை ஆற்றுக்கு சென்று சிறுவர்களைத் தேடினர். இன்று காலையில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து செந்திலை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications