திண்டுக்கல் அருகே 9ம் வகுப்பு மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியருக்கு சிறை!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மாணவனை பிரம்பால் அடித்த பள்ளி ஆசிரியரை நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. பைனான்ஸ் தொழில் செய்து வருபவர். அவரது மகன் கார்த்திகேயன் (14). திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வருகின்றார்.
இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் சிலரை கார்த்திகேயன் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து விசாரித்த ஆசிரியர் பிரபு, கார்த்திகேயனை பிரம்பால் அடித்துள்ளார். இதில் அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த ராஜா பிரபு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் பிரபுவை போலீசார் கைது செய்து திண்டுக்கல் ஜே.எம்.1 நீதிமன்ற மாஜிஸ்திரேட் (பொறுப்பு) லதா வீட்டில் அவரை ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை திண்டுக்கல் மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர்.
இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications