க்யூ பிரிவு போலீசாரை நம்பாமல், மனிதாபிமானத்துடன் நடவடிக்கை எடுங்கள்: முதல்வருக்கு வைகோ கோரிக்கை
சென்னை: க்யூ பிரிவு போலீசாரின் பேச்சை நம்ப வேண்டாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர் செந்தூரன் 23வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். அதிலும் கடந்த 9 நாட்களாக தண்ணீர் கூட குடிக்காமல் இருக்கும் அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எந்நேரத்திலும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
அதனால் செந்தூரனின் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் உள்ள 47 ஈழத்து அகதிகளை விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தூரனின் நிலை மோசமாகிக் கொண்டே போகிறது. ஆனால் இதுவரை 6 தடவை தான் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துள்ளனர். அதனால் சிறந்த மருத்துவர்களை அனுப்பி அவருக்கு உடனே உயர் சிகிச்சை அளிக்க வேண்டும்.
மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு அநீதி இழைத்து வருகிறது. இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி அளிப்போம் என்று தெரிவித்துள்ள மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழக மீனவர் பிரச்சனை, ஈழத் தமிழர்கள் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு இப்படியே செயல்பட்டால் ஒருமைப்பாடு உடைந்துவிடும்.
சிறப்பு முகாம்களில் இருக்கும் இலங்கை அகதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது உண்மையில் எந்த வழக்கும் இல்லை. ஆனால் க்யூ பிரிவு போலீசாரோ அவர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்கின்றனர். தவறு செய்யாத அவர்கள் தவறு செய்ததாக வழக்குப் பதிவு செய்து அரசுக்கு தவறான தகவலை தெரிவிக்கின்றனர். அவர்களின் பேச்சை முதல்வர் நம்பிவிடக் கூடாது. மனிதாபிமானத்துடன் நடவடிக்கை எடுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications