ஊட்டச்சத்துக் குறைபாடுக்கு பெண்களைக் குற்றம் சாட்டுவதா?... மோடிக்குக் குவியும் கண்டனங்கள்
டெல்லி: பெண்கள் அழகுக்காக உடலை வருத்திக் கொள்கின்றனர். பால் கூட குடிக்க மறுக்கிறார்கள். இப்படி உடலை வருத்தி அழகைப் பெற வேண்டும் என்ற நினைப்பதால்தான் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது என்று கூறியுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மோடி அளித்த ஒரு பேட்டியில், ஒரு தாய், தனது மகளிடம் பால் சாப்பிடு என்றால் அங்கே பெரிய சண்டையே வெடிக்கிறது. பால் சாப்பிட்டால் எனது உடல் பெருத்து விடும், கொழுப்பு கூடி விடும், குண்டாகி விடுவேன் என்று பெரும்பாலான டீன் ஏஜ், இளம் பெண்கள் கூறுகிறார்கள். இப்படி இருப்பதால்தான் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது என்று கூறியிருந்தார்.
மோடி பேச்சு வருத்தத்திற்குரியது - சல்மான் குர்ஷித்
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், இப்படி ஒரு கருத்தை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. இதை விட மிகப் பெரிய பிரச்சினைகள் உள்ளன. அது மோடிக்கு் தெரியாமல் போனது வருத்தமானது என்றார்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதாம்பிகா பால் கூறுகையில், ஜிடிபி குறித்து மட்டுமே கவலைப்படுகிறார் மோடி. கல்வி, சுகாதாரம் குறித்து அவர் கவலைப்படவில்லை என்றார்.
தேவையில்லாதது - கிரிஜா வியாஸ்
மூத்த காங்கிரஸ் தலைவர் கிரிஜா வியாஸ் கூறுகையில், மோடி தனது கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும். பெண்களை மிகவும் ஏழ்மையானவர்கள், வறுமையானவர்கள், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாதவர்கள் என்பது போல இது காட்டுகிறது என்றார்.
டிவிட்டரிலும் குவியும் கண்டனங்கள்
இதேபோல டிவிட்டரிலும் பலர் மோடியைக் கண்டித்து பேசி வருகின்றனர். பர்ஸானா வெர்சி என்பவர் கூறுகையில், மோடியின் இந்தப் பேச்சு வெனிசூலா நாட்டுப் பெண்களின் அழகு ஆர்வத்தை அடிப்படையாக கொண்டு வந்திருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
கஷ்யப் ஷா என்பவர் கூறுகையில், நமோ (நரேந்திர மோடி என்பதன் சுருக்கம்)கூறியுள்ள கருத்து அதிர்ச்சி தருகிறது. அனைத்தையும் நன்கு அறிந்த அவரே இப்படிக் கூறியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. ரொம்ப சோகமான கருத்து என்று கூறியுள்ளார்.
சாந்தனு என்பவர் கூறுகையில், ஊட்டச் சத்துக் குறைபாட்டை யாரும் வேண்டும் என்றே வரவேற்க மாட்டார்கள் என்பதை சாதாரணர்கள் கூட புரிந்து கொள்ள முடியும். மோடிக்குப் புரியாமல் போனது ஆச்சரியம்தான் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications