டாஸ்மாக் கடையில் நூதன திருட்டு: மதுவே கேனில் ஊற்றி கடத்தல்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து மதுவை கேனில் ஊற்றிச் சென்றனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. நள்ளிரவு இந்த கடையின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கு கள்ளாப்பெட்டியில் பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் மதுபாட்டில்களை உடைத்து மூக்கு முட்ட குடித்தனர்.
பின்னர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை ஒவ்வொன்றாக திறந்து தாங்கள் கொண்டு வந்திருந்த கேனில் ஊற்றி நிரப்பிக் கொண்டு வந்த சுவடே தெரியாமல் திரும்பிச் சென்றுவிட்டனர். காலை கடையை திறந்த ஊழியர்கள் மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறை திறந்து கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது 200க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் காலியாக இருந்தன.
இந்த நூதன மது திருட்டு குறித்து கடை மேற்பார்வையாளர் முருகேசன் சங்கரன்கோவில் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நெல்லையில் இருந்து கைரேகை நிபுணர் அந்தோணிராஜ் வரவழைக்கப்பட்டு காலி பாட்டில்களில் இருந்த ரேகையை பதிவு செய்தனர். எப்போதும் ஆள்நடமாட்டம் இருக்கும் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை கொள்ளையர்கள் உடைத்து மது திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications