சென்னையில் விபச்சார அழகியை வைத்து 2 நேபாள கொள்ளையர்களை பிடித்த போலீசார்
சென்னை: சென்னையில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற 2 நேபாள நாட்டு கொள்ளையர்களை, விபச்சார அழகியின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேப்பேரியை அடுத்த கோபால் தெருவை சேர்ந்தவர் சுரேந்தர சிங். நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவரது வீட்டில் இருந்து 25 பவுன் நகைகள், ரூ.1.5 லட்சம், 10 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை திருட்டு போனது. இது குறித்து சுரேந்தர சிங், வேப்பேரி போலீசாரிடம் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் சுரேந்தர சிங் வீட்டில் வேலை செய்து வந்த நேபாள நாட்டை சேர்ந்த மணி பகதூர்(46), மோகன்(38) ஆகிய 2 பேரும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
சுரேந்தர சிங்கின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மேற்கண்ட இருவரும் கையில் கிடைத்த பொருட்களுடன் தப்பியோடி உள்ளனர். ஆனால் அவர்கள் டைரி ஒன்றை சுரேந்தர சிங்கின் வீட்டில் மறந்து விட்டு சென்றனர். அந்த டைரியில் ஆந்திராவை சேர்ந்த ராதிகா(20) என்ற பெண்ணின் செல்போன் நம்பர் இருந்தது.
இதையடுத்து ராதிகாவை பிடித்த போலீசார் விசாரித்த போது, அவர் ஒரு விபச்சார அழகி என்பதும், கொள்ளையர்கள் 2 பேரும் அவரது வாடிக்கையாளர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் சுரேந்தர சிங் வீட்டில் கொள்ளையடித்த பிறகு, ராதிகாவின் வீட்டிற்கு சென்ற இருவரும் ஒரு வாரம் உல்லாசம் அனுபவித்ததும் தெரியவந்தது.
விபச்சார அழகியிடம் வாடிக்கையாளர்களாக உள்ள 2 நேபாள கொள்ளையர்களை, அவரை வைத்தே பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி கொள்ளையர்களை போனில் தொடர்பு கொண்ட ராதிகா, இருவரையும் சென்னைக்கு வருமாறு அழைத்தார். ராதிகாவின் அழைப்பை ஏற்று சென்னைக்கு வந்த மணி பகதூரும், மோகனும் போலீசாரிடம் சிக்கினர்.
இருவரையும் கைது செய்த போலீசார் விசாரித்தனர். இதில் நேபாளத்தில் உள்ள டோனல்டூரா என்ற கிராமத்தை சேர்ந்த இருவரும், பல இடங்களில் வேலைக்கு சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகளும், 25 கிலோ வெள்ளிப் பொருட்களும், ரூ.1.5 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications