கள்ளக்காதல்... கொழுந்தனைக் கொன்று சாக்கு மூட்டையில் போட்ட அண்ணி கைது
கிருஷ்ணகிரி: தனது கள்ளக்காதலை கணவரின் தம்பி பார்த்து விட்டதால் பதட்டமடைந்த பெண், அந்த சிறுவனை கொடூரமாக கொலை செய்து விட்டார். அப்பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. 50வயதான இவரது மனைவி பெயர் மாதம்மாள். இவருக்கு 45 வயதாகிறது.
இவர்களுக்கு 25 வயதில் சங்கர் என்ற மகன் உள்ளார். இவருக்குத் திருமணமாகி விட்டது. மனைவி பெயர் கலா, அவருக்கு 24 வயதாகிறது. திம்மராயப்பாவின் வீட்டுக்குப் பின்னால்தான் இவர்களும் வசித்து வருகின்றனர். திம்மராயரப்பாவுக்கு சதீஷ் என்ற பெயரில் 8 வயதில் இன்னொரு மகனும் உள்ளான்.
சம்பவத்தன்று சதீஷ் தனது வீட்டுக்குப் பின்னால் விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவனது பெற்றோர் அங்கு போய் பார்த்தபோது ஒரு சாக்கு மூட்டை கிடந்ததும், அதிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருப்பதும் தெரிந்தது. இதையடுத்து அதைப் பிரித்து பார்த்தபோது அதில் சதீஷின் உயிரற்ற உடல் இருந்ததைக் கண்டு திடுக்கிட்டு அதிர்ந்தனர்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். சதீஷின் தலையின் பின்னால் பலமாக வெட்டியதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
உடனடியாக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சங்கர் வீட்டு முன்பு வந்து நின்று குரைத்தது. பின்னர் அங்கிருந்து நகரவில்லை. இதையடுத்து போலீஸாருக்கு சங்கர் குடும்பம் மீது சந்தேகம் வந்தது.
சங்கர், அவரது மனைவி கலா ஆகியோரிடம் தீவிரமாக விசாரித்தனர். இதில் கலாவின் பேச்சில் குழப்பம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை தீவிரமாக விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.
கலாவும், அவர் கள்ளத்தனமாக தொடர்பு வைத்திருந்த நபரும் சேர்ந்துதான் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
அதாவது கலாவிற்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. சங்கர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நேற்று பிற்பகலில், கலா தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை சதீஷ் பார்த்து விட்டான்.
இதனால் கலா அதிர்ச்சி அடைந்தார். தனது தொடர்பை சதீஷ் அம்பலப்படுத்தி விட்டால் என்ன செய்வது என்று பயந்து விட்டார். இதையடுத்து அவரும், கள்ளக்காதலனும் சேர்ந்து சதீஷை தீர்த்துக் கட்ட முடிவு செய்து விட்டனர்.
இதையடுத்து சதீஷை நைசதாக வீட்டுக்குள் அழைத்து வந்த கலா அங்கு வைத்து சதீஷை அரிவாளால் வெட்டியுள்ளார். அதற்கு அவரது கள்ளக்காதலனும் உடந்தையாக இருந்துள்ளார். பின்னர் உடலை சாக்குப் பையில் போட்டு கட்டி வீட்டுக்குப் பின்னாலேயே போட்டு விட்டனர்.
இதையடுத்து போலீஸார் கலாவைக் கைது செய்தனர். கள்ளக்காதலனைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications