முருகன், சாந்தன், பேரறிவாளன் உயிரைக் காக்க முதல்வர் முன்வர வேண்டும்: சீமான் கோரிக்கை
சென்னை: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களின் உயிர் காப்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மூவரின் உயிர் காக்க தன்னையே தீக்கீரையாக்கிக் கொண்டு உயிர்த் தியாகம் செய்த செங்கொடியின் முதலாமாண்டு நினைவுப் பொதுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
வீரத்தமிழச்சி செங்கொடி தீயைத் தழுவி தனது உயிரை மாய்த்துக் கொண்டது தற்கொலை அல்ல. வாழ்வில் தோற்றுவிட்டோம், கல்வியில் தோற்விட்டோம், தொழிலில் ஏற்பட்ட நட்டம், கடன் சுமையால் விவசாயிகள் உள்ளிட்டோர் தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொள்வது தான் தற்கொலை. வீரம் என்பது மற்றவர்களின் உயிரைக் காக்க தன்னுயிரைத் தருவதாகும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் தனது அண்ணன்கள் மூன்று பேரின் உயிரைக் காக்க தமிழக மக்களே கிளர்ந்தெழுங்கள் என்று கூறிவிட்டு, தனது உடலை தீக்கிரையாக்கிக் கொண்ட செங்கொடியின் செயல் தியாகமாகும். அதுவே வீரத்தின் அடையாளம். இதனை நான் சொல்லவில்லை, நமது இனத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் கூறியுள்ளார். எனவே செங்கொடியி்ன் தியாகம் என்றென்றைக்கும் நினைவு கூறத்தக்கதாகும்.
தூக்குக் கயிற்றை எதிர்நோக்கியிருக்கும் நமது தம்பிகள் மூன்று பேரை காப்பாற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று முதலில் கூறப்பட்டது. தமிழக அரசின் அந்த நிலை பிறகு மாற்றப்பட்டு, மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் தமிழக சட்டப் பேரைவையில் நிறைவேற்றப்பட்டது என்றால், அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்கியவர் வீரத் தமிழச்சி செங்கொடி.
மூவர் விடுதலைக்காக அவர்களின் உயிரைக் காப்பாற்றும் போராட்டத்தில் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் சட்ட ரீதியாக மிகவும் வலிமையானது. அப்படிப்பட்ட தீர்மானத்தை தானே முன்மொழிந்து நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வர் என்றென்றைக்கும் எங்களின் பாராட்டிற்கு உரியவர். இப்பிரச்சனையில் அதே போன்று உறுதியுடன் தமிழக முதல்வர் இதற்கு மேலும் செயல்பட வேண்டும் என்பது தான் உலகத் தமிழர்களின் விருப்பமாகும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் காஞ்சி மக்கள் மன்றத்தின் தலைமை செயலாளர் மகேஷ், நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை தலைமை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி, இயக்குனர் மணிவண்ணன், தடா சந்திரசேகர், தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் கலைக்கோட்டு உதயம், காஞ்சி இராசன், அறிவுச் செல்வன், வெற்றிச்சீலன், மருத்துவர் இளவஞ்சி, குமுதவல்லி, புதுவை கெளரி, வத்சலா உள்ளிட்ட பலரும் செங்கொடியின் தியாகத்தை நினைவு கூர்ந்து உரையாற்றினர்.
முன்னதாக செங்கொடியின் நினைவிடத்திற்குச் சென்று சீமான் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றனர்.












Click it and Unblock the Notifications