கிரீன்லைஃப் நாட்டுக்கோழி நிறுவனம் மீது 200 முதலீட்டாளர்கள் புகார்: மேலாளருக்கு அடி, உதை
ஈரோடு: ஈரோடு அருகே செயல்பட்டு வந்த கிரீன்லைஃப் நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவனம் மீது 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் அவர்கள் அந்நிறுவன மேலாளரை அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் செயல்பட்டு வந்த கிரீன்லைஃப் நாட்டு்க்கோழிப் பண்ணை நிறுவனம் கடந்த சில நாட்களாக பூட்டியே கிடந்தது. மேலும் அதன் கிளை அலுவலகங்களும் பூட்டிக் கிடந்ததால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை திருப்பித் தருமாறு உரிமையாளர்களான பெருந்துறை அருகே உள்ள பூவம்பாளையத்தைச் சேர்ந்த விஸ்வநாதன், வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர் ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.
ஆனால் இந்த இருவரும் கமுக்கமாக செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவி்ட்டனர் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்நிறுவனத்தில் முதலீடு செய்த 200க்கும் மேற்பட்டோர் ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அந்நேரம் அங்கு வந்த கிரீன்லைஃப் மேலாளர் சண்முகத்தைப் பார்த்த முதலீட்டாளர்கள் அவரை அடித்து, உதைத்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சண்முகத்திடம் நிறுவன உரிமையாளர்கள் இருக்கும் இடத்தை தெரிவி்க்குமாறு போலீசார் வலியுறுத்தினர். இதையடுத்து உரிமையாளர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார். அதன் பிறகு சண்முகத்தையும் அழைத்துக் கொண்டு போலீசார் காங்கேயம் புறப்பட்டனர்.
இது குறித்து முதலீட்டாளர்கள் கூறுகையில்,
கிரீன்லைஃப் நிறுவனத்தில் சுமார் 1,900 பேர் ரூ.30 கோடி வரை முதலீடு செய்துள்ளோம். இந்நிறுவனத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். ரூ.1.5 லட்சம் செலுத்தினால் 30 கோழிக்குஞ்சுகள், மாதம் ரூ.9,000 ஊக்கத்தொகை மற்றும் ஆண்டுக்கு ரூ.22,000 போனஸ் தருவதாகத் தெரிவித்ததை நம்பி முதலீடு செய்தோம். ஆனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேல் ஊக்கத்தொகையைக் கொடுக்கவேவில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications