சி.பி.எம். எம்.எல்.ஏ. பாலபாரதியிடம் மோதிய கரூர் கலெக்டர் ஷோபனா

கரூர் மாவட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த ஏழு மணல் குவாரிகள், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் கரூர் மாவட்டத்தில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி அளிக்கக் கோரி கடந்த 31ம் தேதி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திண்டுக்கல் சட்டசபை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி கலந்து கொண்டார். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி அளிக்கக் கோரி கலெக்டரை சந்திக்க அனுமதி பெற்றுள்ளார்.
ஆனால் மனு கொடுக்க வந்த எம்.எல்.ஏ.வை சந்திக்காமலும், எந்த தகவலும் கூறாமலும் கலெக்டர் தனது அலுவலகத்தை விட்டு வெளியே சென்றுவிட்டாராம். மேலும் எம்.எல்.ஏ. கலெக்டர் ஷோபனாவை போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார். ஆனால் அவர் போனையும் எடுக்கவில்லையாம்.
கலெக்டரின் இந்த செயலுக்கு கரூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. கடும் கண்டனம் தெரிவி்த்துள்ளது.
இதற்கிடையே கடந்த 31ம் தேதி நடந்த சம்பவங்களை அப்படியே தொகுத்து தனது கட்சி அலுவலகத்திற்கும், முதல்வர் அலுவலகத்திற்கும் பாலபாரதி புகார் கடிதம் எழுத உள்ளாராம். ஷோபனா கரூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்றது முதல் பத்திரிக்கையாளர்களைக் கூட சந்திக்க மறுத்து வருகின்றாராம்.
ஷோபனாவுக்கு முதல்வர் அலுவலகத்தில் மிகுந்த செல்வாக்கு இருப்பதால் தான் அவர் இப்படி தைரியமாக நடந்து கொள்கின்றார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.












Click it and Unblock the Notifications