செங்கல்பட்டு அருகே அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை
செங்கல்பட்டு: ஒரு மாதத்திற்கு முன்பு திருமணமான அதிமுக கவுன்சிலர் செங்கல்பட்டு அருகே இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்துள்ள பாரேரி கிராமம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வேலு என்ற குமாரவேல் (38). காட்டாங்குளத்தூர் ஒன்றிய 16வது வார்டு அதிமுக கவுன்சிலர். இன்று காலை அவர் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டார்.
அதன் பிறகு அவர் பைக்கில் வீட்டுக்கு கிளம்பினார். அனுமந்தபுரம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே அவர் சென்று கொண்டிருக்கையில் ஒரு கார் வந்து அவரது பைக்கை இடித்தது. இதில் நிலை தடுமாறி பைக்குடன் கீழே விழுந்த அவரை காரில் இருந்து இறங்கிய 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது.
இதில் குமாரவேல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இந்த தகவல் பரவியதும் சிங்கப்பெருமாள் கோவிலில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திமுக இளைஞர் அணியைச் சேர்ந்த ராமு சிங்கப்பெருமாள் கோவிலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு அவரது அண்ணனும், காட்டாங்குளத்தூர் ஒன்றியக் குழு துணைத் தலைவருமான முனிராஜ் வாக்கிங் சென்றுவிட்டு வந்தபோது அவரது வீட்டுக்கு அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி குமாரவேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீது மறைமலைநகர், செங்கல்பட்டு காவல் நிலையங்களிலும் பல வழக்குககள் உள்ளன. அதனால் முன்விரோதம் காரணமாக குமாரவேல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தனிப்படையினர் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
குமாரவேலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் கவிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications