குமரியில் கடல் சீற்றம்: 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு- படகுகள், வீடுகள் சேதம்
குமரி: குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குமரி மாவட்டம் குளச்சல் அருகே 20க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் நேற்று முன்தினம் முதல் ராட்சத அலைகள் எழும்பின. குளச்சல் துறைமுக பாலத்தில் சுனாமி அலைகள் போல் எழுந்த அலைகள் மீனவர்களையே மிரட்டின. இந்த அலைகள் துறைமுக திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள கடல் அலை தடுப்பு சுவரையும் தாண்டி மணல் பரப்பில் வந்து விழுந்தன. இதனால் மணல் பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் பயங்கர சத்தத்துடன் ஒன்றொடு ஒன்று மோதி உடைந்தன. படகுகளில் வைக்கப்பட்டிருந்த வலைகள், மீன்பிடி உபகரணங்கள் மண்ணில் புதைந்தன.
நித்திரவிளை அருகே உள்ள 8க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென கடலில் ஆக்ரோஷமான அலைகள் எழும்பின. கடலரிப்பு தடுப்பு சுவரையும் தாண்டி கடற்கரையை ஒட்டியுள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. அப்பகுதி மக்கள் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் தூத்துர் ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந் பைபர் படகுகளை கடல் அலை இழுத்துச் சென்றது. முள்ளூர்துறை கடற்கரை கிராமத்தில் கடலரிப்பு தடுப்புசுவர் சேதம் அடைந்தது. இது தவிர 30 கிமீ தூரத்திற்கு சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டது. மேலும் 5 வீடுகள் இடிந்து விழுந்தன.
கடல் சீற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கடற்கரை கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications