ரூ. 200 கோடி மோசடி செய்த சுசி ஈமு நிறுவன அதிபர் கைது
ஒகேனக்கல் : 200 கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவான சுசி ஈமு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குருவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஒகேனக்கல் அருகே ஊத்தமலை என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருந்தவரை சுற்றிவளைத்து பிடித்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சுசி ஈமு நிறுவனம் முதலீட்டாளர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்தது. ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் 200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குரு திடீரென தலைமறைவானர். இதனையடுத்து நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்தவர்கள் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் சுசி ஈமு உரிமையாளரும், நிர்வாக இயக்குனருமான குருசாமி, பொதுமேலாளர் கதிர்வேல் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுசி ஈமு நிறுவன பொது மேலாளர் கதிர்வேல் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். உரிமையாளர் குருசாமி உள்பட மற்றவர்களை தொடர்ந்து தேடிவந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது மேலாளர் கதிர்வேல் பெருந்துறையில் கைது செய்யப்பட்டார்.
மேலும் குருசாமியை கைது செய்ய பொருளாதார குற்றவியல் போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் குருசாமி ஒகேனக்கல் அருகில் ஊத்தமலை என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் பங்களாவில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று, பங்களாவில் பதுங்கியிருந்த குருவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பிறகு அவர், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications