கடும் வறட்சி...மக்கள் எதிர்ப்பால் வெளிநாட்டு டூர் போன எம்எல்ஏக்களை திரும்ப சொன்ன முதல்வர்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள 176 தாலுகாக்களில் 146ல் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எம்.எல்.ஏ.க்களை தங்கள் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு ஊர் திரும்புமாறு முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் பணி நிமித்தமாக அர்ஜென்டினா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 29ம் தேதி பெங்களூரில் இருந்து கிளம்பிய அவர்கள் வரும் 15ம் தேதி ஊர் திரும்புவதாக இருந்தது. பணி நிமித்த பயணத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மனைவிகளை அழைத்துச் சென்றுள்ளனர். ஒரு எம்.எல்.ஏ. தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார். அவர்களின் பயணத்திற்காக ஒரு எம்.எல்.ஏ. வுக்கு மட்டும் ஆகும் செலவு ரூ.6 லட்சம் ஆகும்.
இந்நிலையில் மாநிலத்தில் வறட்சி நிலவும் வேளையில் எம்.எல்.ஏ.க்கள் வெளிநாடு சென்றுள்ளதற்கு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேலும் மக்கள் மத்தியிலும் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இதையடுத்து அவர்களை தங்கள் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு உடனே ஊர் திரும்புமாறு கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உத்தரவிட்டுள்ளார்.
வரும் 26ம் தேதி ஐரோப்பா செல்லவிருந்த 12 எம்.எல்.ஏ.க்களின் பயணம் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
வறட்சி நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் மாநிலத்தை விட்டு வெளியேறியிருக்கக் கூடாது என்று முன்னாள் முதல்வர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.
தற்போது வெளிநாடு சென்றுள்ள எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரமும் சரியாகத் தெரியவில்லை. இதனால் அவர்கள் முதல்வரின் உத்தரவை மீறி பணி நிமித்த பயணத்தை ஏதோ இன்பச் சுற்றுலா போன்று ஆக்கிவிட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications