அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத் திரும்பி டாக்ஸியில் தற்கொலை செய்த சாப்ட்வேர் என்ஜினியர்!

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த இம்மாடி அனில் குமார் (30) அமெரிக்காவில் சாண்டியாகோ நகரில் ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராகப் பணியாற்றி வந்தார். ஓராண்டுக்கு முன் இவருக்கும் ஆந்திராவின் நலகொண்டாவைச் சேர்ந்த ஸ்வப்னாவுக்கும் திருமணமானது.
திருமணத்துக்குப் பின் இருவரும் அமெரிக்கா சென்றனர். அங்கு இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந் நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் ஸ்வப்னா நலகொண்டா திரும்பிவிட்டார்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை அனில் குமாரும் இந்தியா திரும்பினார். ஹைதராபாத் விமான நிலையம் வந்த அவர் சிதாரா ஹோட்டலில் தங்கினார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ஹைதராபாத் குகட்பள்ளியில் உள்ள ஈநாடு காலனியில் உள்ள தனது மைத்துனரின் வீட்டுக்குச் செல்வதற்காக மேரு டாக்ஸியில் கிளம்பினார்.
டாக்ஸி மைத்துனரின் வீட்டை அடைந்த நிலையில், அனில் குமார் காரின் பின் சீட்டில் மயங்கிக் கிடந்தார். அவர் தூங்குவதாக நினைத்து அவரை டிரைவர் எழுப்பிப் பார்த்தார். ஆனால், அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அனில் குமாரின் மைத்துனரின் வீட்டினரிடம் தெரிவித்தார் டிரைவர். இதைத் தொடர்ந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தரப்பட்டது. அவர்கள் அனிலின் சட்டை பாக்கெட்டை சோதித்தபோது அதில் தற்கொலைக் கடிதம் இருந்தது. அதில், என்னால் எனது கடமைகளை சரியாக செய்ய முடியவில்லை. எனது கனவுகளும் கலைந்துவிட்டன. என்னை ஆதரித்த நண்பர்களுக்கு நன்றி. இந்திய மண்ணில் எனது உயிர் போக வேண்டும் என்பதற்காகவே நாடு திரும்பினேன் என்று எழுதப்பட்டுள்ளது.
ஹோட்டலிலேயே விஷம் அருந்திவிட்டோ அல்லது காரில் அமர்ந்தோ அவர் விஷம் அருந்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications