கிரானைட் வழக்கில் சிபிஐ எம்எல்ஏ ராமச்சந்திரன் 4வது முறை கைது
கிருஷ்ணகிரி: அனுமதியின்றி கிரானைட் வெட்டி எடுத்து கடத்திய வழக்கில் தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் இன்று 4வது முறையாக கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் தி.க. பிரமுகரை அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் உட்பட பலரை, போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் ராமச்சந்திரன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன்பிறகு அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தி.க.பிரமுகர் கொலை வழக்கு மட்டுமின்றி, ராமச்சந்திரன் மீது பல புகார்கள் எழுந்தன. இது குறித்து போலீசார் விசாரித்ததில், உத்தனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் கிரானைட் மற்றும் கனிமவளங்களை முறைகேடான முறையில் வெட்டி எடுத்து அவர் கடத்தியிருப்பது தெரியவந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ராமச்சந்திரன் மற்றும் அவரது சகோதரர் வரதராஜன் ஆகியோரை கைது செய்து ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆலம்பாஷா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஏற்கனவே சிறையில் உள்ள ராமச்சந்திரன் மீண்டும் கைது செய்யப்பட்டார். அதேபோல சந்தனப்பள்ளி, இருதுகோட்டை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி கிரானைட் வெட்டி கடத்தியதாக அவர் மீது கடந்த 20ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ராமச்சந்திரன் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ராமச்சந்திரன் மீதான வழக்குகள் தொடர்பாக, அவர் சிறை இருந்த நிலையிலேயே 3 முறை கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications