திருவண்ணாமலை கல்லூரி அருகே இளம் பெண் சடலம்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே இளம் பெண் ஒருவரின் சடலம் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ள அத்தியேந்தல் என்ற இடத்தில் தனியார் கல்லூரியின் பின்புறம் உள்ள வயல்வெளி புதரில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பெண் சடலம் கிடந்ததை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இளம்பெண்ணின் முகம் துண்டால் மூடப்பட்டு இருந்தது. போலீசார் துண்டை விலக்கி பார்த்தபோது முகத்தில் கல்லால் தாக்கிய காயங்கள் இருந்தது தெரியவந்தது. நெற்றி, கன்னங்களில் வெட்டு காயம் இருந்தது. அவரது உடல் அருகே ரத்தக்கறை படிந்த கல் மற்றும் மதுபாட்டில், சிகரெட் கிடந்தன. எனவே மர்ம நபர்கள் இளம்பெண்ணை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட இளம்பெண் கல்லூரி மாணவியாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் இளம்பெண் உடல் அருகே ரேகைகள் ஏதாவது பதிவாகி இருக்கிறதா? என்று சோதனை நடத்தினர். மோப்ப வர வழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சுற்று வட்டார பகுதியில் இளம்பெண் அல்லது கல்லூரி மாணவி யாராவது காணாமல் போய்விட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். வயல்வெளியில் இளம்பெண் பிணமாக கிடக்கும் தகவல் பரவியதும் கிராம மக்கள் அங்கு திரண்டனர் இதனால் அங்கு பரப்பான சூழ்நிலை நிலவியது.












Click it and Unblock the Notifications