ஷானாஸை எப்படிங்க ஏற்க முடியும்?.. புளியந்தோப்பு பிரசன்னா குமுறல்!

பலரை காதலித்து மணந்து பின்னர் தலைமறைவான கேரள இளம் பெண் ஷானாஸ் தற்போது கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் புரசைவாக்கம் சும்சுதீன், தி.நகர் ராஜா, அடையாறு சரவணன், திருவொற்றியூர் மணிகண்டன், உதவி இயக்குநர் ராகுல், புளியந்தோப்பு பிரசன்னா ஆகியோரை மணந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இவர்கள் புகார்கள் கொடுத்துள்ளனர்.
இருப்பினும் தான் கேரளாவைச் சேர்ந்த சித்திக் உள்பட நான்கு பேரை மட்டுமே மணந்துள்ளேன். தமிழகத்தில் பிரசன்னா, ராகுல், மணிகண்டனை மட்டுமே மணந்தேன் என்று ஷானாஸ் கூறுகிறார்.
தற்போது ஷானாஸ் வயிற்றில் வளரும் சிசுவுக்கு பிரசன்னாதான் தந்தை என்றும் அவர் கூறியுள்ளார். இது பிரசன்னாவை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளதாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஷானாஸ் நல்ல பெண் என நினைத்து அவளை திருமணம் செய்து கொண்டேன். கடந்த மார்ச் மாதம் எங்களது திருமணம் நடந்தது. அதன் பின்னர் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே புளியந்தோப்பில் உள்ள எங்கள் வீட்டில் சகானா இருந்தாள். பின்னர் இங்கு என்னால் இருக்க முடியாது வேறு இடத்தில் வீடு பாருங்கள் என்று கூறினாள்.
இதை நம்பி, மாதவரம் பால் பண்ணையை அடுத்த மாத்தூரில், ரூ.50 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து மாதம் ரூ.7 ஆயிரம் வாடகைக்கு வீடு பார்த்தோம். அங்கு சென்ற பின்னரும்வீட்டில் சரியாக தங்குவதில்லை.
ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதப்போகிறேன் என்று பொய் சொல்லி விட்டு, விடுதியில் தங்கத் தொடங்கிய அவள் எப்போதாவது மாத்தூரில் உள்ள வீட்டுக்கு வருவாள். அவளை நம்பி ஒன்றரை லட்சத்தை இழந்து நிற்கும் நான் தற்போது வெளியில் தலை காட்ட முடியாமல் தவிக்கிறேன்.
ஷானாஸின் கர்ப்பத்துக்கு நான்தான் காரணம் என்று வெளியாகும் தகவல்கள் என்னை வேதனைப்படுத்துகிறது. அவள் பலருடன் தொடர்பில் இருந்துள்ளாள். எனக்கு டிஎன்ஏ சோதனை நடத்தி, ஷானாஸின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான்தான் தந்தை என்பது தெரியவந்தால் கூட அவளை ஏற்றுக் கொள்ள முடியாது. எப்படி அவளை எனது மனைவியாக ஏற்க முடியும் என்றார் கோபத்துடன்.
இதற்கிடையே, பிரசன்னாவுக்கு டிஎன்ஏ சோதனை நடத்த போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர். இதன் மூலம் ஷானாஸ் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா யார் என்ற குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வரும் திட்டத்தில் போலீஸார் உள்ளனராம்.












Click it and Unblock the Notifications