கரும்பாலைக் கழிவு விற்பனை: இப்போதைய நிலையே நீடிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கரும்பாலைக் கழிவு விற்பனை தொடர்பாக இப்போதைய நிலையையே பராமரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம், சிறுவாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த நவநீதம் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் கீழ் இயங்கும் கரும்பாலைகளில் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் மெட்ரிக் டன் கரும்பாலைக் கழிவு (மொலாசஸ்) உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கரும்பாலைக் கழிவு பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒரு மெட்ரிக் டன் ரூ.1,410 என்ற விலை அடிப்படையில் கரும்பாலைக் கழிவை கரும்பாலைகள் விற்பனை செய்யுமாறு தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் தனி அலுவலர் கடந்த ஜூலை 6-ம் தேதி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். அவரது இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி என். பால் வசந்தகுமார் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பி.சந்திரசேகரன், 'நமக்கு அருகில் உள்ள புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ஒரு மெட்ரிக் டன் கரும்பாலைக் கழிவு ரூ.3,551 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் ரூ.3,800 முதல் ரூ.4,400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இங்கு மட்டும் ரூ.1,410 என விலை நிர்ணயம் செய்யப்பட்டால், அது கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கும்," என்று வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து, கரும்பாலைக் கழிவு விலை தொடர்பாக இதுவரை என்ன நிலை இருந்ததோ, அதையே அடுத்த நான்கு வாரங்களுக்குப் பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
தமிழகத்தில் இப்போதைய நிலவரப்படி ஒரு மெட்ரிக் டன் கரும்பு மொலாசஸுக்கு ரூ என விலை தரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications