சீனாவில் அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 80ஆக உயர்வு!
பெய்ஜிங்: சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
சீனாவில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. முதல் நிலநடுக்கம் நேற்று முற்பகல் 11.30 மணிக்கு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் இதே அளவிலான மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் சுமார் 1 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.
மலை மாகாணங்களான யுன்னான் மற்றும் குஜியோவ் ஆகியவற்றில் நிலநடுக்கத்தால் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லக் கூடடிய சாலைகள் முற்றிலும் நாசமடைந்து போயிருப்பதால் இம்மாகாணங்களில் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும் யுன்னான் மாகாண அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மொத்தம் 730 பேர் படுகாயமடைந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த மாகாணத்தில் மட்டும் 6,650 விடுகள் இடிந்து நாசமடைந்திருக்கின்றன. சுமார் 4 லட்சம் வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. ஏற்கெனவே ஒரு லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மேலும் 1 லட்சம் பேரை வேறு இடத்தில் குடி அமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யுன்னான் மாகாண நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications