கூடங்குளம் அணுமின் நிலையம்: விடிய விடிய முற்றுகை போராட்டம்-2வது நாளாக நீடிப்பு

முன்னதாக கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் பல்லாயிரக்கணக்கில் குவிந்திருக்கும் எதிர்ப்பாளர்களிடம் அரசுத் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. கடற்கரையிலேயே தொடர்ந்து போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பொதுமக்கள் கூடியிருக்கும் இடத்தில் ஆயிரக்கணககான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்பது கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் கருத்து. இதனை வலியுறுத்தி கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதையடுத்து நேற்று காலை இடிந்தகரை சர்ச்சில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூடி பிரார்த்தனை செய்தனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி கூடங்குளத்தை நோக்கிச் சென்றனர். இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். ஆனால் அறிவித்த பாதையில் வராமல் இடிந்தகரையில் இருந்து கடற்கரை வழியாக சென்று கூடங்குளத்தின் பின்பகுதி வழியாக முற்றுகையிட பேரணியின் பாதை திடீரென மாற்றப்பட்டது. இதனையடுத்து போலீசார் தங்களின் பாதுகாப்பு பணியை மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. அதற்குள் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அணுமின் நிலையத்துக்கு மிக அருகில் கடற்கரையில் குவிந்தனர்.
தங்களது போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த போராட்டக் குழுவினர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை நிறுத்தினால் மட்டுமே இந்த இடத்தை விட்டு நகருவோம் என்று அறிவித்திருந்தனர். இதனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இப்பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கடற்கரையிலேயே அமர்ந்து தங்களது முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கடற்கரையிலேயே அனைவருக்கும் உணவு சமைக்கப்பட்டு வழங்கப்பட்டது.
கூடங்குளம் பகுதியில் ஏற்கனவே10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீஸார் கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஆயிரக்கணக்கான கிராமத்தினர் முற்றுகையிட்டு 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் தொடர்ந்து பரபரப்பும் பதற்றமும் அங்கு நிலவி வருகிறது.
இதனிடையே கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications