நீதிமன்றங்களில் தமிழ்: மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதி
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சட்டக்கதிர் தமிழ் சட்ட இதழும், பிரம்ம கான சபையும் இணைந்து நடத்திய இந்த விழாவில், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் நூலை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :
நீதிமன்றங்களில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மொழியை கூடுதல் மொழியாக பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றமும் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு நான் உண்மையான முயற்சிகளை மேற்கொள்வேன்.
தீர்ப்பை தமிழில் எழுதுங்கள்
நம் நாட்டில் பல மொழிகள் பேசப்படுகின்றன. அதுதான் நமது பலமும், பலவீனமும் ஆகும். நமது பலவீனங்களை பலமாக மாற்ற வேண்டும். நவீன தொழில்நுட்ப முறைகள் உள்ளதால் மொழியால் இப்போது பிரச்னை இல்லை. மொழி மாற்றம் செய்து கொள்ளலாம். வழக்கு ஆவணங்கள், படிக்க வேண்டிய ஆவணங்கள், துணை ஆவணங்கள் போன்றவை மாநில மொழிகளில் இருந்தால் உச்சநீதிமன்றங்களில் சிரமம் ஏற்படும்.
எனவே, அதற்கெல்லாம் தீர்வை ஏற்படுத்தக் கூடிய சிறந்த வழிமுறைகளை காண வேண்டும். சாதாரண மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமானால் மொழி அவசியம். இல்லாவிட்டால் நாம் அன்னியப்பட்டு போய்விடுவோம்.
எனவே, மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் அளிக்கப்படும் தீர்ப்பின் சுருக்கத்தை தமிழில் ஒரு பத்தியில் எழுதும் நடைமுறையை நீதிபதிகள் கையாளலாம் என்றார் அமைச்சர்.
தமிழ்மொழியை கவுரப்படுத்த வேண்டும்
இதனைத் தொடர்ந்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. முகோபாத்யாய, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இனிமேல் உச்ச நீதிமன்றம்தான் அனுமதி அளிக்க வேண்டும். இது குறித்து நாடாளுமன்றமும், குடியரசுத் தலைவரும் முடிவு எடுக்க வேண்டும். என்றார். மேலும் பல மாநிலங்களில் நீதிமன்றத் தீர்ப்புகள் தாய்மொழியில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. இதற்கு மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழியை கெளரவப்படுத்த வேண்டும் என்றார் நீதிபதி.
எம்.பி., எம்.எல்.ஏக்களின் தொகுதி நிதி
இதனையடுத்து அமைச்சர் சல்மான் குர்ஷித் வெளியிட்ட இந்த நூலின் முதல் பிரதியை அமைச்சர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் பெற்றுக் கொண்டார். பின்னர் பேசிய அவர், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மட்டும் தாய்மொழியில் நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என்றார்.
மாநில அரசு உடனடியாக தமிழ் ஆட்சிமொழி ஆணையம் மற்றும் மாநில சட்ட ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்.
நீதிமன்றங்களில் தமிழை பயன்படுத்த நிதி ஒரு பிரச்னையாக இருக்குமானால் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஓரு ஆண்டு தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தி அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தமிழை நீதிமன்ற மொழியாக்கும் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று கூறினார் அமைச்சர் பழனிமாணிக்கம்.












Click it and Unblock the Notifications