இடிந்தகரையில் குவிந்த 3000 போலீஸார்... பெரும் பரபரப்பு-பதட்டம்!

கூடங்குளம் போராட்டம் தொடங்கியது முதல் இடிந்தகரைக்குள் போலீஸார் நுழையாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்றுதான் முதல் முறையாக இடிந்தகரை கிராமத்திற்குள் போலீஸார் புகுந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையில் முகாமிட்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை இன்று முற்பகல் வாக்கில் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்ததால் பெரும் போர்க்களமாக மாறியுள்ளது கூடங்குளம் கடற்கரைப் பகுதி.
இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக போலீஸார் பெருமளவில் தடியடி நடத்தியதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஓடத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து அவர்களை போலீஸார் விரட்டிச் சென்றனர்.
இடிந்தகரையை நோக்கி மக்களை போலீஸார் விரட்டிச் சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் இடிந்தகரைக்குள் புகுந்தனர். கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு பொதுமக்களை போலீஸார் விரட்டிச் சென்றதால் வழியெங்கும் பதட்டம் காணப்பட்டது.
சம்பவம் நடந்த பகுதி மணல் மேடுகளும், முட்புதர்களும் நிறைநத் பகுதி என்பதால் மக்களும், போலீஸாரும் பெரும் சிரமத்துடன் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மக்களை விடாமல் துரத்திய நிலையில், கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட போலீஸார் இடிந்தகரைக்குள் நுழைந்துள்ளனர்.
ஏற்கனவே இடிந்தகரையில் போலீஸார் இன்று காலை தடியடியில் இறங்கியதால் அங்கும் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக போலீஸார் குவிந்துள்ளதால் பெரும் பதட்டம் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications