'விவேகானந்த யுவ விகாஸ யாத்திரை' தொடங்கிய மோடி
அகமதாபாத: செப்டம்பர் 11 ம் தேதி என்றாலே அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தாக்குதல்தான் நம் நினைவிற்கு வரும் ஆனால் அதற்கும் முந்தைய வரலாறு ஒன்று இருக்கிறது. அது சிகாகோவில் நடந்த சர்வ சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சரித்திரப் புகழ்வாய்ந்த பேருரை. இதனை கருத்தில் கொண்டு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது யாத்திரையை தொடங்கியுள்ளார். இதற்கு ‘விவேகானந்த யுவ விகாஸ யாத்திரை' என்றும் பெயரிட்டுள்ளார்.
விவேகானந்த யுவ விகாஸ யாத்திரை
குஜராத் சட்டப் பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் முதல்வர் நரேந்திர மோடி ஒரு மாத காலத்துக்கு மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். 1893-ல் அமெரிக்காவில் நடைபெற்ற உலக சமயங்களின் மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் தனது பிரசித்தி பெற்ற உரை நிகழ்த்தியது செப்டம்பர் 11-ம் தேதி என்பதால், யாத்திரையை இந்தத் தேதியில் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இன்றைய தினம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பேச்சராஜி என்ற ஊரில் யாத்திரையைத் தொடங்கும் அவர் குஜராத்தின் முக்கிய பகுதிகளுக்குச் சென்று பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். சிகாகோவில் விவேகானந்தர் உரை ஆற்றியதன் நினைவாகவே மோடியின் யாத்திரைக்கு "விவேகானந்த யுவ விகாஸ யாத்திரை' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த யாத்திரை குறித்து குறிப்பிட்டுள்ள மோடி, சுவாமி விவேகானந்தர் வலிமையான, வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக வேண்டும் என்ற கனவு கண்டார். நான் எனது மாநிலமான குஜராத்தை வலிமையான, வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றவும், அதற்கான இளைஞர்களைத் தேடியும் இந்த யாத்திரையை தொடங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
குட்காவுக்கு தடை
செப்டம்பர் 11 ம் நாள் மாநிலம் முழுவதும் குட்காவை தடை செய்துள்ளேன். இது வளர்ச்சிக்கான மிகச்சிறந்த அடையாளம். குஜராத்தில் உள்ள எந்த பெண்ணும் குட்காவிற்கான தனது கணவனையோ, மகனையோ இழந்ததாக இருக்கக் கூடாது என்பதற்காகவே இதனை தடை செய்துள்ளேன். என் மாநில மக்கள் குட்கா சாப்பிட்டு ஆரோக்கிய சீர்கேடு அடைவதை என்னால் பொருத்துக்கொள்ள முடியாது. குஜராத் மாநிலம் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த மாநிலமாக மட்டும் இல்லாது ஆரோக்கியமான மாநிலமாக மாறவேண்டும் என்றும் மோடி தனது ப்ளாக்கில் எழுதியுள்ளார்.
இந்த நாள் சகோதரத்துவத்தை உணர்த்திய நாள். சுவாமி விவேகானந்தரின் உரையை கருத்தில் கொண்டு அவரது கனவான வலிமையான, வளமான இந்தியாவை உருவாக்க முனைவோம் என்றும் இந்த யாத்திரை குறித்து டிவிட்டரிலும் குறிப்பிட்டுள்ளார் மோடி.