போலீசாரை கட்டையால் கூடங்குளம் போராட்டக் குழுவினர் அடித்ததால் போலீசார் நடவடிக்கை: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: கூடங்குளம் போராட்டக் குழுவினர் போலீசாரை கட்டையால் தாக்கியதால் தற்காப்புக்காக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். மேலும் அணு உலைக்கு எதிராக குழுவினரின் மாயவலையில் மீனவர்கள் சிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின்திறன் கொண்ட இரு அணுமின் அலகுகள் அமைப்பதற்கான பெரும்பாலான பணிகள் முடிவுற்றிருந்த சூழ்நிலையில், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்கள் எழுப்பிய சில ஐயப்பாடுகளையடுத்து, அப்பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை தொடர வேண்டாம் என்றும், இதுதொடர்பான கோரிக்கை மனுவினை நேரில் அளிக்க நேரம் ஒதுக்கீடு செய்து தருமாறும் 19.9.2011 அன்று பிரதமரை கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டேன்.

இதனைத்தொடர்ந்து, அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்திருந்தவர்கள் 21.9.2011 அன்று என்னை தலைமைச்செயலகத்தில் சந்தித்து, கூடங்குளம் மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலைய பணிகள் மேற்கொண்டு தொடரப்படக்கூடாது என்னும் தீர்மானத்தை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்தனர். இவர்களின் வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டு, 22.9.2011 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து, தமிழக நிதி அமைச்சர் தலைமையிலான குழு 7.10.2011 அன்று பிரதமரை நேரில் சந்தித்து, உள்ளூர் நிலவரங்களை எடுத்துரைக்கும் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தது. இந்த மனுவினை பெற்றுக்கொண்ட பிரதமர், மத்திய அரசின் பிரதிநிதிகள், மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழு உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். இதன்படி, மத்திய அரசால் 15 பேர் கொண்ட ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக்குழு அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் சார்பாக நியமிக்கப்பட்ட மூன்று பேருடனும், மாநில அரசுப் பிரதிநிதிகளுடனும் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து, 31.1.2012 அன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவின் சார்பில் ஒருவர் மட்டுமே கலந்து கொண்டார். இந்த பேச்சுவார்த்தைகளின் போது அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினரால் எழுப்பப்பட்ட பல்வேறு வினாக்களுக்கு பதில் அளித்ததோடு மட்டுமல்லாமல், அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான் என்றும், அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்து இரு அறிக்கைகளை மத்திய அரசின் வல்லுநர் குழு அளித்தது.

இதனைத்தொடர்ந்து, அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும், அப்பகுதி மக்களிடையே நிலவும் அச்ச உணர்வுகள் குறித்தும் மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் வண்ணம், மாநில அரசு சார்பில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும், அணுமின் நிலையம் பாதுகாப்பானதுதான் என்று தனது அறிக்கையில் தெளிவுபட கூறியுள்ளதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் சமூக பொருளாதார திட்டங்களை இப்பகுதியில் செயல்படுத்திடலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இதன் அடிப்படையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் வகையிலும், 19.3.2012 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அணுமின் நிலைய பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.

இதன்பின்னர், அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அணுமின் நிலைய பணிகளை தொடர அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினையடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இயக்கத்தை தடுத்து நிறுத்த முற்படுவது பொருத்தமானதாக அமையாது.

இந்த சூழ்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கப்பட உள்ளதை கருத்தில் கொண்டு, இடிந்தகரை பகுதியை சேர்ந்தவர்கள் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர். இதனையறிந்த காவல் துறை, அணுமின் நிலையத்திற்கு செல்லும் வழிகளான தாமஸ் மண்டபம் மற்றும் வைராவிக்கிணறு ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது. ஆனால், போராட்டக்காரர்கள் இந்த இரு வழிகளையும் தவிர்த்து கடற்கரை வழியாக, அணுமின் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் முற்றுகை போராட்டத்தில் நேற்று முன்தினம் அன்று ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை அணுமின் நிலையம் நோக்கி முன்னேற விடாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதும், மீண்டும் கூடுவதுமாக இருந்தனர். இந்த நிலை இரவு முழுவதும் தொடர்ந்தது. காலையில் இன்னும் அதிக எண்ணிக்கையில் போராட்டக்காரர்கள் கூடினர்.

அவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நோக்கி மேலும் முன்னேற முயற்சித்ததோடு, இன்று காலை 11.30 மணியளவில் காவல் துறையினரை கட்டைகளை கொண்டு தாக்க தொடங்கினர். இந்த தாக்குதலில் சில காவல் துறையினர் காயமடைந்தனர். எனவே, தங்களை காக்கும் பொருட்டும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை பாதுகாக்கும் நோக்குடனும், அணுமின் நிலையத்தை போராட்டக்காரர்கள் தாக்கினால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்தினை கருத்தில் கொண்டும், வேறு வழியின்றி காவல் துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மீனவர் வாழ்வாதாரத்திற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதால், அணு உலை எதிர்ப்பு என்ற பொதுவான கொள்கையுடைய எதிர்ப்பாளர்களின் மாய வலையில் விழ வேண்டாம் என்று அப்பகுதி மீனவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அணு உலைக்கு எதிர்ப்பு என்ற பொதுவான கொள்கையுடைய அணு உலை எதிர்ப்பாளர்கள், மிகவும் பாதுகாப்புடன் விளங்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், அணுமின் நிலையம் விரைவில் இயங்க தேவையான ஒத்துழைப்பினை நல்க அவர்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு தற்காலிக சோதனைச்சாவடிக்கு ஒரு கும்பல் தீவைத்து அங்கு வந்த காவலர்களை தாக்கியது. இதில் தற்காப்புக்காக காவலர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தப் பிரச்சனை தொடர்பாக, யாரும் எவ்வித வன்முறையிலும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+