இமானுவேல் சேகரன் நினைவு நாள்: ஜெயலலிதா சொன்னதை செய்ய வேண்டும்-பாஸ்வான்
மதுரை: அரசு துறைகளில் பதவி உயர்வின்போது தலித்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், அரசு துறைகளில் பதவி உயர்வின்போது தலித்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவைக் கொண்டு வர பல்வேறு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.
சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ள தலித் மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது மிகவும் அவசியம். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அளிப்பதற்கு மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் போது, சமூக நீதி என்ற அடிப்படையில் அனைத்து தலித் தலைவர்களும் ஆதரவு அளித்தனர். அதேப்போல, இந்த தலித் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்க வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆட்சிக்கு வருவதற்கு முன், இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பதாகக் கூறியிருந்தார். அதை அவர் நிறைவேற்ற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications