மத்திய பிரதேசத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டம் அறிவித்தபடியே நடக்கும்: வைகோ

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்தியப் பிரதேச மாநிலத்தில் விதிஷா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாஞ்சியில் செப்டம்பர் 21ம் தேதி நடைபெற இருக்கும் புத்தமத கல்வி மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில், பங்கேற்க வருகின்ற சிங்கள அதிபர் ராஜபக்சே லட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை படுகொலை செய்தவர். அன்பை, மனித நேயத்தை, சகிப்புத்தன்மையை போதித்த புத்தரின் நினைவாக அசோகர் எழுப்பிய புத்த விகாரைக்குள் அடியெடுத்து வைக்க ராஜபக்சே தகுதி அற்றவர். அதனால் சாஞ்சிக்கு வர இருக்கும் ராஜபக்சேவுக்கு எதிராக கருப்புக் கொடி அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக மதிமுக அறிவித்துள்ளது.
இது குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு நான் விளக்கமாக கடிதம் எழுதி, அதில் ராஜபக்சே வருகையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தேன். பாஜகவின் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவரும், விதிஷா நாடாளுமன்ற உறுப்பினருமான சுஷ்மா சுவராஜ் கொழும்புவில், ராஜபக்சேயை சந்தித்து, கடந்த 1ம் தேதி தில்லி இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சாஞ்சி புத்தமத விழாவில் ராஜபக்சே பங்கேற்க இருப்பதை முதன் முதலாக அறிவித்தார். தமிழகத்தில் இதற்கு எதிர்ப்பு எழுந்த உடன், "தான் அழைப்பு விடுக்கவில்லை" என்கிறார். அப்படியானால், அழைத்தது யார்?
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசுதான் பின்னணியில் சதித் திட்டம் வகுக்கிறது. அதற்கு ம.பி. அரசு உடந்தையாக செயல்படுகிறது.
21ம் தேதி அறப்போராட்டத்திற்காக சாஞ்சி காவல்நிலையத்தில் விண்ணப்பம் கொடுப்பதற்கு நேற்று செப்டம்பர் 11ல் மதிமுக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி.கிருஷ்ணன், எனது உதவியாளர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் சென்றனர். அவர்களை காவல்துறையினர் கடுமையான சோதனைக்கு ஆட்படுத்தியதோடு, அவர்கள் தங்கியிருந்த அறையைச் சுற்றிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், புத்தமத அமைப்பு என்ற பெயரில் ராஜபக்சேவுக்கு எதிராக அறப்போர் நடத்துவதைத் தாங்கள் கண்டிப்பதாகவும், எதிர்ப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மத்திய அரசினுடைய உளவுத்துறை இதன் பின்னணியில் சதித் திட்டம் வகுப்பது தெரிகிறது.
இந்தியாவில் ராஜபக்சேவுக்கு பெரும் வரவேற்பு என்றும், எதிர்ப்பே கிடையாது என்றும் வெளி உலகத்திற்கு காட்டுவதற்காக மத்திய அரசு சிலரைத் தூண்டிவிட்டு, சதிவேலையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு ம.பி. அரசு உடந்தையாக செயல்படாது என்று நான் நம்புகிறேன். எங்கள் போராட்டம் புத்தமதத்திற்கு எதிரானது அல்ல. புத்தரின் கொள்கைகளுக்கு நேர் விரோதமாக, அரச பயங்கரவாதத்தை நடத்திய ஒருவர் புத்தர் விழாவில் பங்கேற்பதற்கு எதிர்ப்புக் காட்டவே எங்கள் அறப்போராட்டம். திட்டமிட்டபடி அறப்போராட்டம் அமைதி வழியில் நடைபெறும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications