உதயகுமார் மீது கை வைத்தால் இந்த ஆட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்: பழ. நெடுமாறன்
நெல்லை: உதயகுமார் மீது கை வைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும். இந்த ஆட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய மீனவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து பாளையில் நடந்த உண்ணாவிரத்ததை முடித்து வைத்து தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் பேசியதாவது,
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 400 நாட்களுக்கும் மேலாக அங்குள்ள மக்கள் போராடி வருகினறனர். மகாத்மா காந்தி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட கலவரம் வெடித்தது.
அணு உலையினால் ஆபத்து ஏற்பட்டால் மதுரை வரை பாதிப்பு ஏற்படும். லட்சக் கணக்கான மக்கள் அழிவார்கள். தங்களின் எதிர்கால தலைமுறையினரின் வாழ்வு என்ன ஆகும் என்ற அச்சத்தில் மக்கள் போராடுகின்றனர். வாழ்வாதாரத்திற்காக நடக்கும் போராட்டத்திற்கு ஜாதி சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது. ஜாதியின் பெயரால் மக்களை இழிவுபடுத்த முடியாது.
மக்களின் அச்சத்தைப் போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உதயகுமார் தனிப்பட்ட நபர் இல்லை. மக்கள் போராட்டத்தினால் உருவான தலைவர். எனவே அடக்குமுறை மூலம் போராட்டத்தை நசுக்க முடியாது. உதயகுமார் தீவிரவாதி இல்லை. அவர் மீது கை வைத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும். இந்த ஆட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூடங்குளத்தில் போலீசார் தடியடி நடத்தியது கணடிக்கத்தக்கது. அங்கு குவிக்கப்பட்டுள்ள போலீஸ் படையை உடனே வாபஸ் பெற வேண்டும். உதயகுமாரை அழைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்றார்.