கிரானைட் ஊழல் தொடர்பு: அரசு அதிகாரிகள் வங்கி லாக்கர்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சென்னை: மதுரை கிரானைட் ஊழலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அரசு அதிகாரிகளின் வங்கி லாக்கர்களை இன்று முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தமிழகம் முழுவதும் 34 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முன்னாள் மதுரை கலெக்டர்கள் மதிவாணன், காமராஜ், கனிமவள உதவி இயக்குநர் ராஜாராம், கிரானைட் அதிபர்கள் பி.ஆர்.பழனிச்சாமி, செல்வராஜ் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது கிரானைட் ஊழல் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் சிக்கின. இதில் கடந்த 10 ஆண்டுகளில் மதுரையில் பணிபுரிந்த மாவட்ட கலெக்டர்கள், கனிமவள உதவி இயக்குனர்கள், மேலூரில் பணிபுரிந்த வருவாய் துறை அதிகாரிகள், வணிக வரித்துறை அதிகாரிகள் என்று மொத்தம் 21 அரசு அதிகாரிகளுக்கு கிரானைட் ஊழலில் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது.
இதில் முன்னாள் மதுரை கலெக்டர்கள் காமராஜ், மதிவாணன் உட்பட மொத்தம் 7 அதிகாரிகளின் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மீதமுள்ள 14 அரசு அதிகாரிகளின் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து, தேவைப்பட்டால் வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கிரானைட் ஊழலில் தொடர்புடைய அதிகாரிகளின் மொத்த சொத்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அவர்களின் வங்கி கணக்குகள், வங்கி லாக்கர்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் சேகரித்துள்ளனர். ஊழல் தொடர்பாக சிக்கியுள்ள அரசு அதிகாரிகளின் வங்கி கணக்குகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது,
கிரானைட் ஊழல் தொடர்பான வழக்கில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் 34 இடங்களில் நடத்திய சோதனையில், 10 அதிகாரிகளின் வங்கி லாக்கர்களின் சாவிகளை கைப்பற்றி உள்ளோம். ஆனால் முன்னாள் மதுரை கலெக்டர் காமராஜின் வங்கி லாக்கர் சாவி இன்னும் கிடைக்கவில்லை. எனவே இதுவரை கிடைத்துள்ள அதிகாரிகளின் வங்கி லாக்கர்களை இன்று திறந்து சோதனை நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கோரிக்கை கடிதம் அளித்துள்ளோம்.
மேலும் தமிழகம் முழுவதும் கிரானைட் ஊழலில் தொடர்புடைய அதிகாரிகளின் வங்கி லாக்கர்கள் திறந்து சோதனையிடும் பணியின் முடிவில் அதிகாரிகளின் மொத்த சொத்து விவரங்கள் தெரியவரும் என்றார்.
இந்த நிலையில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 94 கிரானைட் குவாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்கனை மதிப்பிடும் பணி முடிவடைந்துள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 1,70,000 கிரானைட் யூனிட்களை மதிப்பீடு செய்ததில், அது ரூ.6,800 கோடி மதிப்பு என்று தெரியவந்துள்ளது. மதிப்பீடு செய்யப்பட்ட கிரானைட் கற்கள் அனைத்து பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையி்ல கிரானைட் ஊழல் தொடர்பாக இதுவரை மொத்தம் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி மீது மட்டும் 13 வழக்குகள் பதிவாகி உள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகள், கிரானைட் அதிபர்கள் ஆகியோர் மீது இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக தலைமறைவாக உள்ள கிரானைட் அதிபர்கள் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications