3 மாதம் தாமதமாக மேட்டூர் அணை இன்று திறப்பு: சம்பா சாகுபடிக்கு தயராகும் விவசாயிகள்

மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக ஜூன் 12-ந் தேதி நீர் திறந்துவிடப்படும். இதனால் டெல்டா பாசன விவசாயிகளின் குறுவை சாகுபடி பயனடையும். ஆனால் நடப்பாண்டில் போதுமான நீரை கர்நாடகம் திறந்துவிடவில்லை. இதனால் வழக்கம் போல மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. குறுவை சாகுபடியும் பொய்த்துப் போனது.
இந்நிலையில் சம்பா சாகுபடிக்காவது தண்ணீரை திறந்துவிட கர்நாடகத்தை வலியுறுத்தி தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட தமிழக அரசு வலியுறுத்தியும் மத்திய அரசு உரிய ஆர்வம் காட்டவில்லை. இதனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. தமிழக அரசின் மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம் தற்காலிகமாக ஒரு வார காலத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருந்தது. அதற்கு முன்னரே கர்நாடகத்தின் கபினி அணை நிறைவடையும் நிலையில் தமிழகத்துக்கு உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய உத்தரவின்படி மேட்டூர் அணையில் இருந்து இன்று பகலில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் மலர்தூவி அணையை திறந்து வைத்தார். இதன் மூலம் சம்பா நெல் பாசனத்திற்கு முதல்கட்டமாக வினாடிக்கு 4,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தற்போதைய தண்ணீர் திறப்பின் மூலம் மேட்டூர் நீர் மின் நிலையத்தில் சுமார் 400 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.
தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதன் மூலம் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் 6.95 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும், கரூர், திருச்சி மாவட்ட பாசன பகுதிகளில் 2.40 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும், கடலூர் மாவட்டத்தில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் நிலமும், கல்லணை பாசன பகுதிகளில் 2.22 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும், பெண்ணாறு பாசன பகுதிகளில் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடையும்.
தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து சம்பா நெல் சாகுபடிப் பணிகளுக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications