தமிழக மக்கள் ஏன் அணு உலையை எதிர்த்து போராடுகிறோம் தெரியுமா? திருமாவளவன்
தூத்துக்குடி: அணு உலையை கேரளாவில் அமைக்க முயன்றபோது அங்குள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடி விரட்டியடித்தன. ஆனால் தமிழகத்தில் ஒற்றுமை உணர்வு இல்லாததால் இன்று நாம் அணு உலைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். கேரள மக்கள் போல தமிழக மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையைக் கண்டித்து தூத்துக்குடி பனியமாதா ஆலயம் முன்பு நேற்று 6வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது,
ஈழம் என்ற சொல் உலகத்தை திரும்பி பார்க்க வைத்ததுபோல் இடிந்தகரையும் உலக மக்களை உற்றுப் பார்க்க வைத்துள்ளது. அணு உலையை கேரளாவில் அமைக்க முயன்றபோது அங்குள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடி விரட்டியடித்தன. ஆனால் தமிழகத்தில் ஒற்றுமை உணர்வு இல்லாததால் இன்று நாம் அணு உலைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். கேரள மக்கள் போல தமிழக மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. பல நாடுகளில் இருந்து கழற்றி எடுக்கப்பட்டு வந்த பொருட்கள் மூலம் கூடங்குளம் அணு உலை அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. மேலும் அணு உலை அமைந்துள்ள இடத்துக்கு கீழே எரிமலை குழம்பு ஓடிக் கொண்டிருப்பதாக ராஜேந்திர சர்ச்சார் தெரிவித்துள்ளார்.
இயற்கையிலேயே அது பாதுகாப்பாக இல்லை. சுண்ணாம்பு பாறையின் மேல் அமைந்துள்ளது. அணு உலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, கழிவு மூலம் தயாரிக்கப்படும் அணு குண்டுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா ஏகாதிபத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தான் பிரதமர் மன்மோகன் சிங் சில்லரை வாணிபத்தில் அன்னிய நாடுகள் முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளார். இது அணு உலைக்கு எதிரான போராட்டம் மட்டும் அல்ல. ஏகாதிபத்ய நாடுகளுக்கு எதிரான போராட்டமும் ஆகும் என்றார்.












Click it and Unblock the Notifications