ஆந்திர சட்டசபை தேர்தலுக்கு தயாராகிறார் சந்திரபாபு நாயுடு-வரும் 2ம் தேதி பாதயாத்திரையை துவக்குகிறார்
ஹைதராபாத்: வரும் 2014ம் ஆண்டு ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், மக்களின் பிரச்சனைகளை அறிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் 2ம் தேதி முதல் மாநில அளவிலான பாதயாத்திரையை துவங்க உள்ளார்.
சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது மாநிலம் முழுவதும் பாத யாத்திரை நடத்தித் தான், அடுத்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸை ஆட்சியைப் பிடிக்க வைத்தார் மறைந்த ராஜசேகர ரெட்டி. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வெளியே இருக்கும் நாயுடு, இப்போது அதே டெக்னிக்கை பயன்படுத்தவுள்ளார்.
ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் வரும் 2014ம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்னதாக ஆந்திர மக்களின் பிரச்சனைகளை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப பிரச்சாரத்தில் ஈடுபட தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாடு முடிவு செய்துள்ளார். மேலும் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக ஆந்திரா மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள போவதாக அவர் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் (அக்டோபர்) 2ம் தேதி முதல் பாதயாத்திரையை துவக்கி, மொத்தம் 117 நாட்களில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை வலம் வர உள்ளார்.
பாதயாத்திரையை மகபூப்நகர் மாவட்டம், கோடங்கல் அல்லது ரெங்காரெட்டி மாவட்டம் தாதூரில் இருந்து துவங்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். பாதயாத்திரையின் முழு விபரங்களை நாளை அவரே வெளியிட உள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.
தெலுங்கு நடிகரும், சந்திரபாபு நாயுடுவின் மைத்துனருமான பாலகிருஷ்ணா, பாதயாத்திரையில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தெலுங்கு தேசம் கட்சி அனுமதிக்கும் பட்சத்தில் ஆந்திர சட்டசபை தேர்தலில் நானும் போட்டியிட விரும்புகிறேன். அதேபோல சந்திரபாபு நாயுடு நடத்தும் பாதயாத்திரையில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், நிச்சயம் கலந்து கொள்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications