ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நடுரோட்டில் தூங்கி, சுட்டெரிக்கும் வெயிலிலும் போராடும் வைகோ!
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தமத கல்வி நிலைய துவக்க விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்துள்ளார். அவருக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மற்றும் அவரது கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் மத்தியப் பிரதேசத்திற்கு பேருந்துகளில் சென்றனர்.
இவர்கள் மகாராஷ்டிரம்- மத்தியப் பிரதேச எல்லையில் உள்ள பந்துர்னா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து அதே இடத்தில் மாலை 4.30 மணி முதல் நடு ரோட்டில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு குவிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான போலீசாரும் அவர்களுக்கு எதிரிலேயே அமர்ந்துள்ளனர்.
விடிய விடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராட்டம் நடைபெற்றது. வைகோ உடன் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் இரவு உணவு அங்கேயே சமைத்து பரிமாறப்பட்டது.
ராஜபக்சேவின் கொடுமைகளை பற்றி இந்தியில் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட துண்டுபிரசுரத்தை அங்குள்ள கிராம மக்களுக்கு தொண்டர்கள் விநியோகம் செய்தனர். இதனையடுத்து நள்ளிரவில் கொட்டும் பனியில் நடுரோட்டில் தொண்டர்களுடன் வைகோ படுத்து உறங்கினார்.
காலையில் உள்ளூர் மக்கள் உணவும், நீரும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். கொளுத்தும் வெளியில் பேராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் கூட்டத்தில் பேசிய வைகோ, ராஜபக்சேவுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மட்டுமல்லாது பாஜகவும் ஆதரவு தருவதாக குற்றம் சாட்டினார்.
மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று தம்மிடம் கூறிவிட்டு தற்போது எல்லையிலேயே தடுத்து நிறுத்திவிட்டதாகவும் வைகோ தெரிவித்தார்.
தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதற்காக ஒரு உயிர் வேறு போயிருக்கிறது. தங்களை தடுத்து நிறுத்தினாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று கூறினார். இதற்காக தாம் கைதாகவும் தயார் என்றும் வைகோ கூறினார்.
இந் நிலையில் இன்று காலையும் மத்தியப் பிரதேச அரசின் உயர் அதிகாரிகள் வந்து வைகோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வைகோ திரும்பிச் செல்லமாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதற்கிடையே மத்தியப் பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌஹானே, வைகோவை தொடர்பு கொண்டு, போராட்ட முடிவைக் கைவிட்டு திரும்பிச் செல்லுமாறு கோரிக்கை வைத்தார். இதையும் வைகோ ஏற்கவில்லை.
தற்போது சாஞ்சிக்கு செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. பலத்த சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
இந்த தகவலை மத்தியப் பிரதேசத்தில் இருந்து மதிமுக இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமதி அலி நம்மிடம் தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications