தாக்குதல் எதிரொலி: சென்னை அமெரிக்க தூதரகத்தில் 24ம் தேதி வரை விசா வழங்கல் இல்லை
சென்னை: நபி நாயகத்தை அவமதிக்கும் வகையில் எடுக்கப்பட்ட சினிமாவை கண்டித்து சென்னையி்ல் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக விசா வழங்கும் பணியை அமெரிக்க தூதரகம் நிறுத்தி வைத்துள்ளது. தற்போது சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளதால் வரும் 24ம் தேதி முதல் மீண்டும் விசா வழங்கும் பணிகள் துவங்க உள்ளது.
சென்னை அண்ணா சாலையில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இங்கு அமெரிக்காவிற்கு வேலை மற்றும் சுற்றுலா செல்பவர்கள், வர்த்தக பணிகளுக்காக செல்பவர்கள் விசா பெற விண்ணப்பம் செய்கின்றனர். இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, முறையான விசா வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சினிமா ஒன்றில் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றதாக கூறி, முஸ்லிம் அமைப்புகள் கடந்த வாரம் முற்றுகை போராட்டம் நடத்தி, அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் தூதரக அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு காமிரா மற்றும் கண்ணாடிகள் சேதமடைந்தன.
பாதுகாப்பு கருதி அமெரிக்க தூதரக அதிகாரிகள் விசா வழங்கும் பணியை நிறுத்தி வைத்தனர். இதனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்களை பெறும், சென்னை தூதரகத்தின் பணிகள் முடங்கியது. மேலும் குறிக்கப்பட்ட காலத்தில் விசா கிடைக்காமல் விண்ணப்பித்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந் நிலையில் அமெரிக்க தூதரகம் முன் தற்போது அமைதி நிலவி வருகிறது. மேலும் தூதரகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனவே வரும் 24ம் தேதி முதல் மீண்டும் வழக்கம் போல விசா வழங்கும் பணி துவங்கும் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications