ஒருதலைக் காதல் விபரீதம்... 9-ம் வகுப்பு மாணவி கழுத்து அறுத்துக் கொலை!
கோவை: தனது காதலை ஒப்புக் கொள்ளாத 9-ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்துக் கொன்றார் வெல்டிங் ஷாப் தொழிலாளி.
கோவை கணபதி கணேஷ் லே-அவுட் 5-வது வீதியை சேர்ந்தவர் அய்யப்பன் - அஜிதா மகள் அபிநயா (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அபிநயா வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிப்பவர் வேணுகோபால் (21). வெல்டிங் தொழிலாளி. வேணுகோபால் ஒருதலையாக அபிநயாவை காதலித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அபிநயா பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்த வேணுகோபால் யாருக்கும் தெரியாமல் அபிநயா வீட்டுக்கு சென்று அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். அதிர்ச்சியடைந்த அபிநயா மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த வேணுகோபால் தான் வைத்திருந்த கத்தியால் மாணவி அபிநயாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். பின்னர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அபிநயாவின் தாய் அஜிதா வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவை தட்டிப்பார்த்தார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு மாணவி அபிநயா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அருகில் வேணுகோபால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த சரவணம்பட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வேணுகோபாலை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.
சரவணம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications