சோமாலியாவில் மசூதி வாசலில் எம்.பி. முஸ்தப் ஹாஜி முகமத் சுட்டுக் கொலை
மொகதிஷு: சோமாலியாவில் மாலை நேர தொழுகையை முடித்துவிட்டு மசூதியில் இருந்து வெளியே வந்த எம்.பி. முஸ்தப் ஹாஜி முகமத் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சோமாலியாவின் வபேரி மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று மாலை நேர தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தார் அண்மையில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி. முஸ்தப் ஹாஜி முகமத். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
உடனே அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்த கொலைக்கு எந்தவித அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் அல் கொய்தாவுடன் தொடர்புடைய அல் ஷபாப் அமைப்பினர் இதை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. புதிதாக அமைச்சரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல் ஷபாப் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை தான் ரேடியோ ரிப்போர்ட்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை நடந்த முந்தைய நாள் ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 3 செய்தியாளர்கள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
முஸ்தப் ஹாஜி முகமதை சில இரக்கமில்லாதவர்கள் சுட்டுக் கொன்றுவிட்டனர். அவர் ஒரு நல்ல குடிமகன் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமத் ஒஸ்மான் ஜவாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications