களக்காடு மலையில் பயங்கர காட்டுத் தீ: அணைக்கப் போராடும் வனத்துறை
நெல்லை: களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. அதை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் அரிய மூலிகைச் செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து சாம்பலாகின.
களக்காடு புலிகள் காப்பக மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கடும் வறட்சி நீடிக்கிறது. அருவிகள் மற்றும் நீரோடைகள் தண்ணீரின்றி வறண்டதால் வனவிலங்குகள் குடிநீருக்காக கடுமையாக திண்டாடி வருகின்றன. மழை பெய்யாததால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி பசுமையை இழந்து காய்ந்து காணப்படுகிறது. எனவே, வனத்துறையினர் தீ தடுப்புக் கோடுகள் அமைத்து வந்தனர். மேலும் மலைப்பகுதியில் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் களக்காடு புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த திருங்குறுக்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட கண்ணொளி மொட்டை பகுதியில் இரு இடங்களில் நேற்று திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள காடுகளுக்கு தீ பரவியது. இந்த தீயில் மூலிகைச் செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications