டெக்கான் சார்ஜர்ஸ் நீக்கம்: சமரச தீர்வு மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த மே மாதம் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்தை அடிப்படையாக கொண்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணி பங்கேற்றது. ஆனால் நிதிநெருக்கடியில் சிக்கி தவித்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் வீரர்களுக்கு சம்பளம் அளிக்காமல், பாக்கி வைத்தது.
இந்த நிலையில் வீரர்களுக்கு சம்பள பாக்கியை அளித்து தீர்க்க, பிசிசிஐ காலகெடுவை நீடித்தது. ஆனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்வாகத்தால், வீரர்களுக்கு சம்பளம் அளிக்க முடியவில்லை. மேலும் சென்னையில் நடைபெற்ற அணி விற்பனை ஏலத்தையும் டெக்கான் சார்ஜர்ஸ் நிர்வாகம் ரத்து செய்தது.
இதனால் ஐபிஎல் ஆட்சிமன்ற குழுவின் அவசர கூட்டம் கூடி, விதிமுறைகளை மீறி செயல்பட்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணியை, ஐபிஎல் குழுவில் இருந்து நீக்கியது. இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தலைவர் சீனிவாசன் இந்த அறிவிப்பை வெளியி்ட்டார். பிசிசிஐயின் ரத்து நடவடிக்கையை எதிர்த்து, டெக்கான் சார்ஜர்ஸ் அணி, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு நீதிபதி கதவாலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,
நாங்கள் தற்போது சிக்கியுள்ள நிதி நெருக்கடியில் இருந்து மீண்டுவர சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. நிதி நெருக்கடியில் இருந்து மீண்டுவர முயன்று வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளாக அணியை நடத்தி வருகிறோம். எனவே வருங்காலத்திலும் அணியை நடத்தி செல்ல முடியும் என்று நம்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,
டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் மீதான ரத்து நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்டது அல்ல. தற்போதைய நிலையில் அணி வீரர்களின் சம்பள பாக்கியை அளிக்க வேண்டியுள்ளது. மேலும் அணியின் பராமரிப்பு செலவும் உள்ளது. ஒரு அணியை வழிநடத்தி செல்ல குறைந்தது ரூ.150 கோடி தேவைப்படுகிறது. அடுத்த மாதம்(அக்டோபர்) 31ம் தேதி, அணியி்ல் உள்ள வீரர்களின் ஒப்பந்தங்கள் புதுப்பிக்க வேண்டியுள்ளது.
டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் தற்போது உள்ள வீரர்களுக்கு சம்பள பாக்கி உள்ள போது, புதிய வீரர்களை எப்படி ஒப்பந்தம் செய்ய முடியும். மேலும் வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டிய நிலையில், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை மேற்கொண்டு எப்படி நடத்தி செல்ல முடியும்? என்று அதில் தெரிவித்திருந்தது.
இருத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த பிரச்சனையை இருத்தரப்பினருக்கும் ஏற்புடைய ஒரு சமரச தீர்வு மையம் மூலம் பேசி தீர்த்து கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதற்கு இருத்தரப்பின் வழக்கறிஞர்களும், சமரச தீர்வு மைய நடுவர் மூலம் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பாக தங்களின் நிர்வாகங்களிடம் ஆலோசித்து விட்டு, தகவல் தெரிவிப்பதாக கூறினர். இதையடுத்து வழக்கின் விசாரணை இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இன்று இருத்தரப்பினருக்கும் ஏற்ற சமரச தீர்வு மைய நடுவர் குறித்து தெரிவிக்காத நிலையில், மும்பை உயர்நீதிமன்றம் தரப்பில் இவ்வழக்கிற்கு ஒரு சமரச தீர்வு மைய நடுவர் நியமிக்கப்படுவார்.












Click it and Unblock the Notifications