சரோஜா, குள்ளம்மாள், குப்பம்மாள்... தந்தையை காதலியோடு எரித்துக் கொன்ற மகன்!
சேலம்: சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே 2 மனைவிகள் இறந்த நிலையில் 3வது பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த தனது தந்தையை அவரது காதலியோடு சேர்த்து தீவைத்து எரித்துக் கொன்றார் மகன். இதையடுத்து அவரையும் அவரது கூட்டாளிகள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
பூலாம்பட்டியைச் சேர்ந்தவர் 62 வயதான ராமசாமி. இவர் சரோஜா, குள்ளம்மாள் ஆகிய சகோதரிகளை ஒரே சமயத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இருவருடனும் இணைந்து குடும்பம் நடத்தி வந்தார். இதில் சரோஜாவுக்கு அகிலாண்டேஸ்வரன், விமலா என்ற இரு பிள்ளைகள். இதில் அகிலாண்டேஸ்வரன் ஏற்கனவே விபத்தில் இறந்து விட்டார். குள்ளம்மாள் மூலம் வைத்தீஸ்வரன் என்ற ஒரே ஒரு மகன் இருக்கிறார்.
ராமசாமிக்கு இப்போது 62 வயதாகிறது. அவரது இரு மனைவிகளும் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்த நிலையில் மூன்றாவதாக குப்பம்மாள் என்பவரை சேர்த்துக் கொண்டு வசித்து வந்தார்.
வைத்தீஸ்வரன் தனது தாயாருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். ஆனால் அதை வைத்தீஸ்வரனுக்கு எழுதிக் கொடுக்க மறுத்து வந்தார் ராமசாமி. இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வைத்தீஸ்வரன், அவரது உறவினர்கள் ராஜேந்திரன், ராமசாமி, வெங்கட்ரெட்டி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து, ராமசாமி, குப்பம்மாள் ஆகியோர் தங்கியிருந்த குடிசை வீட்டுக்கு தீ வைத்தனர்.
இதில், ராமசாமி, குப்பம்மாள் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்து போனார்கள்.
மரணத்திற்கு முன்பு தனது மகனும், 3 பேரும் சேர்ந்து தன்னை எரித்ததாக போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தார் ராமசாமி. இதையடுத்து வைத்தீஸ்வரனையும், ராஜேந்திரன், ராமசாமி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். வெங்கட் ரெட்டி தப்பி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications