அதிசய ராகம்... ஆனால் ஆனந்த ராகமா, இல்லை முகாரியா?.. ஹீனா, பிலாவல் காதல் கதை!
டெல்லி: பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவை காதலித்து வருவதாக கூறப்படும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கர், பிலாவலுக்கு அனுப்பிய ரம்ஜான் வாழ்த்தின்போது பொறுத்தது போதும். இனியும் இந்த காத்திருப்பு தேவையில்லை. இனி நாம் ஒன்றாவோம் என்று தகவல் அனுப்பிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
அவங்களுக்கு 34, இவருக்கு 24
பெனாசிரின் மகன் பிலாவை காதலிக்கும் ஹீனாவுக்கு 34 வயதாகிறது. பிலாவலுக்கு வெறும் 24 வயதுதான். வங்கதேசத்தைச் சேர்ந்த பிளிட்ஸ் என்ற பத்திரிக்கைதான் இவர்களின் இந்த அபூர்வ ராக காதல் கதையை முதலில் அம்பலப்படுத்தியது.
பிலாவலுக்கு வாழ்த்துகளைக் குவித்த ஹீனா
பிலாவலுக்கும் ஹீனாவுக்கும் இடையிலான ரகசிய கடிதப் போக்குவரத்து, வாழ்த்துக்கள், பரிசுகள் குறித்த விவரங்கள் மீடியாக்களில் வெளியாகியுள்ளன.
அதில் ஒரு காதலன், காதலிக்கு இடையிலான நெகிழ்ச்சி, உருக்கம், பாசத்தைக் காண முடிகிறது.
நமது உறவின் அடித்தளம் புனிதமானது.. உருகிய ஹீனா
2011ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி பிலாவல் பிறந்த நாளையொட்டி ஒரு வாழ்த்து அனுப்பியுள்ளார் ஹீனா. அதில், ஹீனா தனது கைப்பட, நமது உறவின் அடித்தளம் புனிதமானது. அதை யாராலும் தகர்க்க முடியாது. விரைவில் நாம் ஒன்றிணைவோம் என்று கூறியுள்ளார்.
காத்திருந்தது போதுமே...
சமீபத்தில் முடிவடைந்த ரம்ஜான் பண்டிகைக்கு ஒரு பரிசை பிலாவலுக்கு அனுப்பி வைத்த ஹீனா, அதில், கைப்பட எழுதிய வாழ்த்துச் செய்தியையும் அனுப்பி வைத்துள்ளார். அதில், இதுவரை நாம் பொறுத்திருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அதற்கு முடிவு சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கூறியுள்ளார் ஹீனா.
கசமுசா கோலத்தில் பார்த்து அதிர்ந்த சர்தாரி
ஹீனா, பிலாவல் இடையிலான ரகசிய உறவு சர்தாரிக்கு தெரிந்த விதம் ரொம்பக் கொடுமையானதாம். அதாவது இருவரையும் கசமுசாவான கோலத்தில் பார்த்து அதிர்ந்து போய் விட்டாராம் சர்தாரி. சர்தாரியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்துத்தான் ஹீனாவையும், பிலாவலையும் ஒன்றாகப் பார்த்துள்ளார் சர்தாரி. அப்போதுதான் அவருக்கு தனது மகனின் இந்த வில்லங்க காதல் குறித்த விவரம் தெரிய வந்ததாம்.
உங்க வேலையைப் பாருங்க சர்தாரி... உருமிய ஹீனா!
மகனுக்கும், ஹீனாவுக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதை நேரிலேய கண்டு விட்ட சர்தாரி அதிர்ச்சி அடைந்து ஹீனாவை நேரில் அழைத்துத் தனியாக பேசியுள்ளார். அப்போது அவர்களது உறவைக் கண்டித்தாராம். ஆனால் ஹீனா பயப்படவில்லையாம். மாறாக, எனது தனிப்பட்ட விஷயத்தில் நீங்கள் எப்படி தலையிட முடியும் என்று எனக்குத் தெரியவில்லை என்று கண்டிப்பான குரலில் தைரியமாக கூறினாராம்.
எப்போது திருமணம்..?
திருமணத்திற்குப் பின்னர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் செட்டிலாவதுதான் ஹீனாவின் திட்டம். இதற்கு பிலாவலும் ஒப்புக் கொண்டு விட்டாராம். ஆனால் தங்களது ரகசியத் திட்டங்கள் அம்பலத்திற்கு வந்து விட்டதால் ஹீனாவும், பிலாவலும் அப்செட்டாகியுள்ளனர். இருப்பினும் இதுவும் நல்லதற்கே என்று அவர்கள் நிம்மதியாகவே உள்ளனராம்.
என்ன செய்யப் போகிறார் சர்தாரி?
ஹீனாவும் சரி, பிலாவலும் சரி தங்களது காதல் மற்றும் கல்யாணத்தில் படு உறுதியாக இருப்பதால் சர்தாரிக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். ஹீனாவை விலக்கி விட அவரது கணவருக்கு நெருக்கடி கொடுத்துப் பார்த்தார். ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை. ஹீனாவை நேரிலேயே கூப்பிட்டு மிரட்டியும் பார்த்தார். ஆனால் அவரோ சர்தாரி மீதே பாய்ந்து விட்டார். இதனால் எப்படி பிலாவலை, ஹீனாவை விட்டு பிரிப்பது என்ற யோசனையில் சர்தாரி இருப்பதாக கூறப்படுகிறது.