ஆளுநர் மாளிகை வளாகத்தில் தூக்கில் பிணமாகத் தொங்கிய மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரர்
சென்னை: சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள மரத்தில் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் மாளிகை உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் சங்கபோரா(43). கர்நாடகா மாநிலத்தின் பகல்கட் மாவட்டத்தை சேர்ந்த இவர், அங்கேயே தங்கி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த சங்கபேரா, சென்னை மைலாப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உதவியாக அவரது மனைவியும் உடனிருந்தார்.
இந்த நிலையி்ல இன்று காலை 5.30 மணியளவில் ஆளுநர் மாளிகையின் தென்புற வாயில் அருகே உள்ள கருவேல மரத்தில் ஒருவர் பிணமாக தொங்குவதை, பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் கண்டனர். இது குறித்து கிண்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரித்து போது, தற்கொலை செய்து கொண்டது சங்கபோரா என்பது தெரியவந்தது. அவருடன் பணியாற்றி வந்த மற்ற போலீசார் கூறுகையில், கடந்த சில நாட்களாக சிறுநீரகம் கோளாறு காரணமாக மிகவும் மனமுடைந்த நிலையில் அவர் காணப்பட்டதாக தெரிவி்த்தனர்.
முன்னதாக உத்தபிரதேச மாநிலம் நொய்டாவில் பணியாற்றி வந்த சங்கபோரா, தனது சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் சென்னைக்கு மாறுதல் பெற்று வந்தார். சென்னைக்கு மாறுதலாகி வந்து 2 மாதங்கள் தான் ஆகிறது.












Click it and Unblock the Notifications