பள்ளிகளில் டாய்லெட் இல்லாவிட்டால் எப்படி?... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சுளீர்!
டெல்லி: பாடம் கற்றுக்கொடுப்பது மட்டும் கடமையல்ல மாணவர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகளையும் ஏற்படுத்தித்தர வேண்டியது பள்ளி நிர்வாகத்தினரின் கடமை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடுமுழுவதும் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான குடிநீர், கழிப்பிட வசதியின்றி உள்ளது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கழிப்பிட வசதி இல்லாத பள்ளிகளில் மாணவிகளின் பாடு திண்டாட்டம்தான். இதனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் அடிப்படை வசதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இதனை விசாரித்து தீர்ப்பளித்தனர். அதில் கூறியிருப்பதாவது :
நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த உத்தரவினை தனியார் பள்ளிகளும், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும்.
இவை அனைத்தையும் இன்னும் 6 மாதத்திற்குள் மாநில அரசுகளும், பள்ளிகளும் நிறைவேற்ற வேண்டும். இந்த உத்தரவை மீறி 6 மாதத்திற்கு பிறகும் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளில் பாடம் கற்றுக்கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல அடிப்படை வசதியும் முக்கியம் என்பதை என்றைக்குத்தான் இந்த அரசுகள் புரிந்து கொள்ளப்போகின்றனவோ தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவிற்குப்பின்பாவது அவற்றை நடைமுறைப்படுத்துவார்களா என்பது பெரும்பாலானவர்களின் கேள்வி.












Click it and Unblock the Notifications