நெல்லை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் வெளியிட்டார். மாவட்டத்தில் தற்போது கூடுதலாக 5 ஆயிரத்து 623 வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இந்த நிலையில் மேற்கண்ட 10 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் செல்வராஜ் வெளியிட்டார். இதை திமுக சார்பில் மாவட்ட துணை செயலாளர் முத்துராமலிங்கம், அதிமுக சார்பில் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ், முகமது சலீம், பாளை மண்டல தலைவர் எம்.சி.ராஜன் உள்பட பலர் பெற்று கொண்டனர்.
கடந்த ஜனவரி மாதம் 5ந் தேதி வெளியிடப்பட்ட பட்டியலில் மொத்தம் 21 லட்சத்து 16 ஆயிரத்து 14 பேர் வாக்காளர்களாக இருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் மொத்தம் 21 லட்சத்து 21 ஆயிரத்து 637 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
இது குறித்து கலெக்டர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நெல்லை மாவட்டத்தில் 21 லட்சத்து 21 ஆயிரத்து 637 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 10 லட்சத்து 63 ஆயிரத்து 194 பேர் ஆண்கள். 10 லட்சத்து 58 ஆயிரத்து 533 பேர் பெண்கள். மற்றவர்கள் 10 பேர். கடந்த செப் 15ம் தேதி வரை 9626 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தகுதியான 5623 பேர் சேர்க்கப்பட்டனர். 779 பேர் இடம் பெயர்ந்ததாலும், இறந்ததாலும் நீக்கப்பட்டனர்.
1.1.2013 தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர்களாக பெயர் பட்டியலில் சேர்க்கலாம். பெயர் சேர்க்க படிவம் 6, நீக்க படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, தொகுதிகள் மாற்றம் செய்ய படிவம் 8ஏ ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications