கைலாஷ் யாத்திரைக்கு அரசே மானியம் தர வேண்டும்-ராம கோபாலன்
சென்னை: ஹஜ், ஜெருசலேம் செல்வதற்கு நிதி ஒதுக்குவதைப்போல இந்துக்களின் புனித யாத்திரைக்கும் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கவேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதா கயிலாய புனித யாத்திரைக்கும், முக்திநாத் யாத்திரைக்கும் மானியம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இது குறித்து சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை, பத்திரிகை விளம்பரம் ஒன்று வெளியிட்டுள்ளது. முதலில் அரசு மானியம் வழங்கும் என்றே கூறப்பட்டது, தற்போது கோயில் பணத்திலிருந்து தருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது துரதிருஷ்டவசமானது.
மேலும் இந்த விளம்பரத்தில் மானியத்தொகை யாத்திரை போய் வந்த பின்னர் வழங்கப்படும் என்றுள்ளது. இதனால் ஏழைகள் எப்படி பயன்பெற முடியும்? அப்படியே கடன் வாங்கி போனாலும் அரசு மானியம் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இப்படி பல குளறுபடிகள் இந்த அறிவிப்பில் உள்ளதாக பக்தர்கள் கருதுகிறார்கள்.
ஹஜ், ஜெருசலத்திற்குச் சென்று வர எப்படி அரசு நிதி ஒதுக்குகிறதோ அதுபோல இந்துக்களின் புனித யாத்திரைக்கும் அரசே ஒதுக்க வேண்டும். அரசு இது குறித்து விளக்கம் அளிப்பதோடு, அரசின் நிதியிலிருந்து மானியம் வழங்கவும், மக்கள் தொகைக்கு ஏற்ப எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆவண செய்ய வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.












Click it and Unblock the Notifications