போலி ஏடிஎம் கார்டு மூலம் அரசு ஊழியர்கள் சம்பள பணம் 'அபேஸ்'!
நெல்லை: நெல்லையில் போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி அரசு ஊழியர்களின் சம்பள பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மஹாராஜா நகரில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் கணக்கு மேற்பார்வையாளராக பணிபுரிபவர் சுதிர். இவர் அங்குள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த 1ம் தேதி இவரது கணக்கில் மாத சம்பளம் ரூ.21,858.47 பணம் வரவாகி உள்ளது.
ஆனால் மறுநாள் காலை 8.05 முதல் 8.15க்குள் 3 முறையாக ரூ.21 ஆயிரம் அவரது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து வங்கி கிளையிலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். மாநகர போலீசார் சைபர் கிரைம் போலீசாருக்கு அந்த புகாரை அனுப்பினர்.
இது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், மேலும் ஒரு ஆசிரியர், அரசு ஊழியர் ஆகியோரின் சம்பள பணமும் ஏடிஎம் சென்டர்களில் மர்மநபர்களின் மூலம் எடுக்கப்பட்டதாக புகார் வந்துள்ளது. இதேபோல இதுவரை 4 பேர் புகார் அளித்துள்ளனர்.
மேலும் தூத்துக்குடியில் தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரும், தனது சம்பள பணம் திருடப்பட்டதாக வங்கியில் முறையிட்டுள்ளார். இதுகுறித்து வங்கி வட்டாரத்தில் விசாரித்த போது கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை பெருமாள்புரம் ஏடிஎம்மில் மர்ம நபர்கள் கிம்மர் கருவிகளை பொருத்தி இருந்ததாகவும் இதை பணம் அடுக்கி வைக்க சென்ற போது ஏடிஎம் ஊழியர்கள் கண்டுபிடித்ததாகவும் தெரிவித்தனர்.
உடனடியாக ஏடிஎம் எந்திரனின் உள்ளே அட்டை சென்று வரும் முறையை அதிகாரிகள் ரூ.1 லட்சம் செலவில் மாற்றி அமைத்தனர். ஆனால் அதுவரை பதிவு செய்த வாடிக்கையாளர்களின் பதிவு எண்களை வைத்து, போலி ஏடிஎம் அட்டை தயாரித்து அவர்களின் வங்கி கணக்கை கண்காணித்து பணத்தை திருடி உள்ளனர். பணத்தை இழந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வேறு ஏடிஎம் கார்டு வழங்க வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications