ஜீவசமாதி பரபரப்பு: சாமியாரைக் காண திரளும் பக்தர்கள்
சீர்காழி: சீர்காழி அருகே சாமியார் ஜீவ சமாதி அடைய போவதாக பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் தியானத்தில் அமர்ந்துள்ள சாமியாரைக்காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
சீர்காழியை அடுத்த தாண்டவன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர். சடகோபராமானுஜம் ஆச்சாரியார் (44). இவர் இளம் வயது முதலே ஆன்மீகத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் அந்த பகுதிலேயே லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் கட்டி அதில் ஆஞ்சநேயர் சிலையையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார். மேலும் பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கி வருகிறார்.
ஒவ்வொரு வருடமும் இவர் புரட்டாசி மாதத்தில் மவுன விரதம் இருந்து வருவது வழக்கம். இந்தமுறை கோவில் அருகிலேயே சிறிய அளவில் மேடை போன்ற வடிவில் மண்டபம் அமைத்து புதன்கிழமையன்று தியானத்தில் அமர்ந்தார்.
தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு கோவிலுக்கு வந்தனர். இது குறித்து அங்கு வந்த பக்தர் ஒருவர் கூறுகையில், ஏற்கனவே சாமிகள் ஜீவசமாதி அடைய போவதாக தெரிவித்திருந்தார். பக்தர்கள் மறுப்பு தெரிவித்ததால் அந்த எண்ணத்தை தள்ளி போட்டுள்ளார். ஆனாலும் இப்படி சிறிய மண்டபம் அமைத்து சாமிகள் தியானத்தில் ஈடுபட்டிருப்பது ஜீவசமாதியோ என்ற அச்சம் பக்தர்களிடையே எழுந்துள்ளது.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சுவாமியின் சகோதரர் பழனி, வழக்கமாக சுவாமிகள் மவுனவிரதம் இருப்பார். இந்த வருடம் உலக அமைதி மற்றும் நன்மைக்காக தியானத்தில் அமர்ந்துள்ளார். வருகிற சனிக்கிழமை வரை இந்த தியானம் தொடரலாம் என்பதாக தெரிவித்தார்.
இருப்பினும் சீர்காழியை சுற்றியுள்ள ஏராளமான கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சாமிகளின் தியானத்தை காண வந்து கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications